Home        Saivaite way of Living        Saivaite Rules       Ultimate and Only God Shiva

Kodi Maram Kavithai in Unicode Tamil
 

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
அருளிச் செய்த
கொடிக்கவி
உரையாசிரியர்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
Quick Navigation to more Saivism Links :
--------------------------------------------------------------------------------
ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் துதி
பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்
    பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
கண்ட இரு தயகமல முகைகளெல்லாம்
    கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு
    மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்
புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்
    பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்
                                    (அருணந்தி தேவ நாயனார்)
ஸ்ரீ உமாபதி தேவ நாயனார் துதிப் பாடல்கள்
அடியார்க் கெளியன் எனத்தில்லை
    அண்ணல் அருளுந் திருமுகத்தின்
படியே பெற்றான் சாம்பாற்குப்
    பரம முத்தி அப்பொழுதே
உடலும் கரைவுற் றடைந்திடுவான்
    உயர்தீக் கையினை அருள்நோக்கால்
கடிதிற் புரிகொற் றங்குடியார்
    கமல மலரின் கழல்போற்றி.
திருவார் கயிலைத் திருநந்தி தேவர் திருமரபில்
வருமா சிரியன் மறைஞான சம்பந்த மாகுரவன்
அருள்சார் உமாபதி தேகிகன் செஞ்சர ணாம்புயமென்
மருவார் மலரிணை யுள்கி வழுத்தி வணங்குதுமே.
திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------
ஆசியுரை
பழனி காசிவாசி சித்தாந்த சரபம்
மகாமகோபாத்தியாய சிவாகம ஞானபானு
ஈசான சிவாசாரிய சுவாமிகள்
 
    கொடிக்கவி, சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று; 'சைவ சித்தாந்த சாத்திரம்,' மெய்கண்ட சாத்திரம் என வழங்கப்பெரும்.  சைவம் சிவசம்பந்தமுடையது: சித்தாந்தம் சிவாகமங்கள்.  'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பது சித்தியார்.  ஆகமம் ஆப்தனால் சொல்லப்பட்டது.  ஆப்தன், உண்மை உரைப்போன்; மெய்கண்டவன்; மெய்ந்நெறியை வகுத்தோன்; மெய்கண்டான்.  அவர் சிவபெருமானே: அவரே அநாதி மெய்கண்டார்: அவர் 'பரகுரு': திருநந்தி தேவர் முதல் பரஞ்சோதி முனிவர்வரை யுள்ளோர் 'பரபரகுரு'.  திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் 'அபரகுரு' அநாதி மெய்கண்டார்வழி வந்தமையின் சைவசித்தாந்த சாத்திரம் 'மெய்கண்ட சாத்திரம்' என வழங்கப்பெறும்.  அவ்வாறு வழங்கப் பெறுவது இக் கருத்துப் பற்றியேயாகு.  அத்துணை, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு, திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரண மீறானவைகளாம்.  இவை, பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மை கூறுமுகத்தால், நியாய தருக்க நெறி பிறழாமல், சித்தாந்த சைவச் சிறப்பினை தெரித்துணர்த்தி, சாதனமும் பயனும் ஒப்பக் கூறுதலால், சாஸ்திரப் பிரபஞ்சங்களுள் வியாபகமானவை.  ஏனைய சாஸ்திரங்கள் வியாப்பியமாம்.  புலன்களுக்கு அடிமைப்பட்டு அவற்றிற்கு ஆவனவே செய்து அவற்றின் வழியில் அழுந்தி அலமரும் உயிர்களை அத்துன்பச் சூழலினின்று கடப்பிக்கும் நூல்கள் 'சாத்திரங்கள்' எனப் போற்றப்படும்.  மேலே சுட்டிய முப்பொருள்களை உணர்த்துவதோடமையாது, அந்தப் பொருள்களையும் அவற்றின் பகுதியவாகிய, சிவம், சத்தி, உயிர், உயிரறிவை மறைக்கும் மலம், அம் மறைப்பு நீங்குந்தனையும் துணையாக நிற்கும் மாயை, மாயா கருவிகள் கூடுதலால் உண்டாம் சகல நிலை, நீங்குதலால் வரும் கேவல நிலை, இவைகளையும் இல்லை எனக் கூறும் கோளை மறுத்து இவை உள்பொருள்களே எனப் பிரதிக்ஞை செய்து சிவசந்நிதியிலே, எந்த முயற்சியுமின்றி விருஷபத் துவசக்கொடிமேல் நோக்கிச்சென்று பறந்திடுமாறு செய்தலின் இது கொடிக்கவி என்னும் அப் பெயர் பெற்றது.  தீக்ஷ¡கரமத்தால் உயிர்கள் அருள் பொருந்துமாற்றைத் தெரிப்பது: ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதி உய்யுமாறு அவற்றின் வகையும் சிறப்பும் கூறுவது.  ஏனைய பதின்மூன்று சாத்திரங்களில் கூறப்படும் உண்மைகளைச் சிவசந்நிதியில் பிரதிக்ஞா ரூபமாக இனிது நாட்டுவது இந்நூல்.
    இதனைத் தெளிந்த உரையுடன் நமக்கு உபகரிப்பவர்கள், நமது சைவசித்தாந்த பண்டிதர் சைவத்திருவின் சார்வே பொருள் எனக் கொள்ளும் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் ஆவர்.  இவர்கள் சித்தாந்த சைவபரிபாலனமே தமக்குரிய கடப்பாடாகக் கொண்டு பணிபுரியும் ஞானவீரர்: புறச்சமய நிராகரணமும் சுவமதத் தாபனமுமே தமது வாழ்நாளின் பரமலக்ஷ்யமாமெனக்கொண்டு வாழ்கின்றவர்கள்.  இந்தத் தெளிந்த உரை, அந் நூற்பொருளை யுணர்தற்குச் சிறந்த சாதனமாம்.  இந்த உரையின் வாயிலாகச் சைவ நன்மக்கள் சிவஞானப் பேறு பெறுவர் என்பது திண்ணம்.
    சைவசித்தாந்த ஞானநூற்பிரவேசம், முறையால் சிவநேசர்கள் பால் வளர்க.  (உமாபதி சிவம்) 'குருவருள்' துணை புரிவதாக.
ஈசான சிவாசாரியர்

--------------------------------------------------------------------------------

சிவமயம்
பதிப்புரை
    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற ஒளவையார் வாக்கைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களில் திருநெல்வேலியுறை செல்வர்கள் பாராட்டப் பெற்றவர்கள்.  திருநெல்வேலியின் ஒரு பகுதியான திருமங்கை நகரம் என்னும் பேட்டையில் கொல்லம் 1014ம் ஆண்டில் சேனையர் மரபினர் ஒரு விநாயகர் கோவில் கட்டத் தீர்மானித்து வாணம் வெட்டும்போது வெல்லக் கட்டியுடன் ஒரு விநாயகர் உருவமும் தென்பட்டது.  அந்த விநாயகரையே கோவில் கட்டி முடிந்தவுடன் சைவத்திரு.பூலாம் மூப்பனார் அவர்களும், சப்பாணி மூப்பனார் அவர்களும் பிரதிஷ்டை செய்து சர்க்கரைக் கட்டியுடன் அவ்விநாயகர் காட்சிகொடுத்த அருளை எண்ணி, அவருக்கு "சர்க்கரை விநாயகர்" என்று திருநாமமிட்டு வணங்கி வருகிறார்கள்.  கொல்லம் 1034ம் ஆண்டு தை மீ சதய நட்சத்திர நன்னாளில் பேட்டை சைவத்திரு பொ.பேச்சிமுத்து மூப்பனார் அவர்களும் அவர்கள் சகோதரர்கள் சைவத்திரு. பொ.இராமலிங்க மூப்பனார் அவர்களும், சைவத்திரு, பொ.திரவிய மூப்பனார் அவர்களும் சேர்ந்து கர்ப்பக்கிரஹம் கட்டி மூலஸ்தானத்தில் விநாயகர் புதிய மூர்த்தி பிரதிஷ்டை செய்து முதல் முதல் கண்டெடுத்துப் பிரதிட்டை செய்து வணங்கிவந்த சர்க்கரை விநாயகரை முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.  அப்புண்ணியசீலர் பொ.பேச்சிமுத்துமூப்பனார் அவர்களின் வழி வந்தவர்கள் சைவத்திரு.பே.சி.சு.ந. சங்கரநாராயணன் அவர்கள்.  சைவத்திருப்பணியில் ஈடுபட்டு முன்னோர்கள் எழுதி வைத்த தர்மங்களை முறை தவறாது நடத்திவரும் பேறு பெற்றவர்கள்.  மேற் கூறிய சர்க்கரை விநாயகர் கோவிலில் எழுந்தருளப் பெற்றிருக்கும் ஸ்ரீசந்திரசேகரப் பெருமாளுக்கு, தில்லைச் சிதம்பரத்தை அனுசரித்து மார்கழி மீ உற்சவமும் சுவாமி எழுந்திருந்து முதலானவையும் சிறப்பாக நடந்துவருகின்றன.  இவ்வுற்சவத்தின் கொடியேற்றுவிழாக் கட்டளையும் ஸ்ரீ சங்கரநாராயணன் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நடத்தி வருகிறார்கள்.  அக்கொடியேற்று விழாவன்று இக்'கொடிக்கவி' என்னும் நூல் திரு.சங்கரநாராயணன் அவர்களாலேயே வெளியிடப்படுகிறது.  எடுத்த இப்பிறப்பிலே சித்தாந்த சாத்திரங்களின் பொருள் தெரிந்து, ஓதி, ஞானாசிரியர் திருவடியடைந்து, உபதேசம் பெற்று, அவ்வுபதேச நெறியில் வழுவாமல் நின்று ஒழுக வேண்டும் என்ற குறிப்பை ஸ்ரீ உமாபதி சிவாச்சார்ய சுவாமிகள் இக்கொடிக்கவியில் அருளிச் செய்திருக்கிறார்களாதலாலே, அந்நூலைப் பலரும் ஓதி உய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலை வெளியிட முன்வந்த திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி செலுத்த நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.  அப்புண்ணிய சீலருக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் சகல சம்பத்துக்களும், மென் மேலும் பெற்று வாழ அருள்புரிவாராக.
    இக்கொடிக்கவி நூலுக்கு எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி விளக்கமாக உரையெழுதித்தந்த சித்தாந்த பண்டித பூஷணம் சைவத்திரு.ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளை அவர்கள், ஸ்ரீசர்க்கரை விநாயகர் எழுந்தருளியிருக்கும் பேட்டை நகர வாசியும், தமது வீடு மனை முதலியவற்றை ஸ்ரீ மெய்கண்ட சிவாச்சாரிய சுவாமிகள் குருபூசை முதலிய தர்மங்களுக்கு உரிமைப்படுத்தித் தமது கால்வழிகளை அவ்வாச்சாரிய சுவாமிகளுக்கு அடிமை யாக்கியவர்களுமான ஸ்ரீலஸ்ரீ த.ஆறுமுகநயினார் பிள்ளை யவர்களது மூத்த புதல்வர்.  அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் சித்தாந்தச் செந்நெறிக்கே அர்ப்பணம் செய்துவரும் தவசிரேஷ்டர்.
    "இந்நூலுக்குப் பல பழைய உரைகள் உண்டு.  அத்தனை உரைகளிருப்பினும், இப்பொழுது ஸ்ரீ ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் எழுதி யுபகரித்த உரையும் வேண்டற்பாலதேயாகும்.  தமிழ்க் கல்வியும் சைவசமய நூலுணர்வும் குறைந்து மேனாட்டு நாகரிகம் மிதந்து கிடக்கும்.  இக்காலத்தில் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சைவர்கள் அனைவரும் சமய சாத்திரங்களை எளிதிற் கற்றுணர்ந்து சமய ஞானம் பெறுமாறு இந்நூலுக்குத் தெளிவான பதவுரை கருத்துரை யென்பன எழுதி வெளியிட்ட பேருதவிக்குச் சைவ உலகமும் தமிழுலகமும் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையன."
    என்று சைவத் திரு வீ. சிதம்பரராமலிங்க பிள்ளையவர்கள் (காலஞ் சென்ற துறைசை ஆதீன வித்வான்)  இந்நூலின் முதற்பதிப்புக்கு ஆசியளித்திருக்கின்றார்கள் என்றால் நம்போல்வர் அவர்களது பெருமையை எடுத்துப் பேசுவது மிகையாகும்.  ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களுக்கும் இக்கழகத்தார் நன்று செலுத்துவதுடன், இவ்வாறே பல சைவத் தொண்டு புரிவதற்கு அவர்களுக்குத் திருவருள் சுரக்கும்படி, ஸ்ரீ காந்திமதியம்பா சமேத ஸ்ரீ நெல்லையப்பரைப் பிரார்த்திக்கிறோம்.
சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார்
திருநெல்வேலி டவுண்
17-12-1958

--------------------------------------------------------------------------------

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
கொடிக்கவி
(விளக்கம்)
தோற்றுவாய்
    மெய்கண்ட *சாத்திரங்கள்  பதினான்கு.  அவற்றுள் ஒன்று கொடிக்கவி யென்பது.  அதற்கு ஆசிரியர் ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்.  அவர்கள் தில்லைத் திருவுடையந்தண குல தீபமாய் விளங்கியவர்கள்.  அத்தலத்தில் ஸ்ரீமத் நடராஜப் பெருமானாரின் திருவிழா வந்தது.  அக்காலைக் கொடியேற்றுமுறை அவ்வாசாரிய சுவாமிகளுக்குரியதாயிற்று.  ஆனால் மற்றை வேதியர்களால் அவர்கள் அவ்வுரிமையினின்றும் விலக்கப்பட்டிருந்தார்கள்.  விலக்கிய சில வேதியர் அக் கொடியை ஏற்ற முயன்றனர்.  கொடி ஏறவில்லை.  திகைத்தன ரவர்.  'எம் அன்பன் உமாபதி சிவன் வந்து ஏற்றினால் அ·தேறும்' என்று தாண்டவயர் அதனைக் கேட்டு அவ்வாசாரிய சுவாமிகள் இருக்குமிடஞ் சென்று அவர்களை வணங்கிச் சிவபிரானாரின் அருளிப்பாட்டை விண்ணப்பித்து, வந்தருளுமாறு வேண்டினர்.  சர்வலோக சரண்யராகிய பரசிவப் பிரபுவின் திருவடிப்பற்றையே பற்றாகக்கொண்டு அவரருள்வசமாய் நின்று வரும் ஸ்ரீ மத் சுவாமிகள் அச் சிவாஞ்ஞையைச் சிரமேற் கொண்டு ஆலயத்துக்கு வந்து இரு கரங்களையுங் கூப்பிக் கூத்துடைப் பெருமானாரைச் சிந்தித்த வண்ணமாய் நின்று நான்கு திருப்பாட்டுக்களைப் பாடியருளினார்கள்.  கொடிதானாக ஏறியது.  தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.  வான வாத்தியங்கள் முழங்கின.  ஆங்குக் குழுமியிருந்த வேதியர் முதலிய அனைத்துச் சிவபக்த சீலர்களும் ஹர ஹர முழக்கஞ் செய்தார்கள்.  அந்நான்கு பாட்டுஞ் சேர்ந்து கொடிக்கவி யென்னும் இந் நூலாயிற்று.  இது கொடிப்பாட்டு எனவும் படும்.  முதற் பாட்டுக் கட்டளைக் கலித்துறை.  மற்றவை வெண்பாக்கள்.
    கொடிமரம் சிவமயம், கொடிச்சீலை திரோதன் சத்தி; அதில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர்.  கொடிக் கயிறு அருள்.  அதனோடியைந்துள்ள தருப்பைக் கயிறு பாசம்.  சிவபிரான் ராஜாதி ராஜர்.  உயிர்கள் அவரின் குடிகள்.  அக் குடிகளை வருத்தும் வேடராதியோர் பாச வகைகள்.  அவரை யொழித்து அவ் வுயிர்களைத் தம்பா லாக்கிப் பரிபாலிப்பவர் அச் சிவ ராஜரே.  அத்திறன் அவருக்கேயுண்டு.  அவர் திருமுன் ஏற்றப்படுங் கொடி அவ்வுண்மையை விளக்கும்.   கொடி ஏறுகின்றது.  வேடரெல்லாஞ் சத்தி கெட் டோடுகின்றனர்.  உயிர்களெல்லாம் உய்தி கூடிப் பேரின்ப வாழ் வெய்துகின்றன.  வைதிக சைவ ராஜாங்க கெளரவ மன்றோ அவ் விடபக் கொடி.  அது கம்பீரமாய்ப் பறந்திடுக.
 
* மெய்கண்ட சாத்திரங்கள் 14
 நூல் ஆசிரியர்
1. சிவஞான போதம்  ஸ்ரீ மெய்கண்ட தேவ சுவாமிகள்
2. சிவஞான சித்தியார்
(சுபக்கம், பரபக்கம்)  ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்
3. இருபா இருப·து ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்
4. திருவுந்தியார் திருவியலூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்
5. திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்
6.  உண்மை விளக்கம் திருவதிகை ஸ்ரீ மனவாசகங் கடந்தார்
7. சிவப்பிரகாசம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
 8. திருவருட்பயன்
 கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
 9. வினா வெண்பா கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
10. போற்றிப்ப·றொடை கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
11. கொடிக்கவி கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
12. நெஞ்சுவிடுதூது கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
13. உண்மை நெறி விளக்கம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
14. சங்கற்ப நிராகரணம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
--------------------------------------------------------------------------------
முதற் பாட்டு
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட
    மொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளடரா
    துள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள
     தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும்படி
     கொடி கட்டினனே.
பதவுரை
ஒளிக்கும் - சிவஞானத்துக்கும்
இருளுக்கும் - ஆணவமலத்துக்கும்
ஒன்றே இடம் - ஆன்ம வர்க்கம் ஒன்றுமட்டுமே தங்கு மிடமாகும்
ஒன்று மேலிடில் - சிவஞானம் ஆணவ மலமாகிய
                [இரண்டனுள் ஒன்று மேலிட்ட காலத்தில்
ஒன்று ஒளிக்கும் - மற்றொன்று மறைந்து விடும்
எனினும் - என்றாலும்
இருள் - ஆணவ மலமானது
அடராது - (சிவஞானத்தைப்) பந்தியாது
உயிர்க்கு உயிராய் - எல்லா உயிர்களுக்கும் உயிராகி
உள்தெளிக்கும் - அவைகளறிவை விளக்குகின்ற
அறிவு - சிவஞானமானது
திகழ்ந்து உளதேனும் - (பூர்வ புண்ணிய விசேடத்தினால்சிறிது)
உயிர் - அவ்வான்மா [ஆன்மாவின் மாட்டு விளங்கினாலும்]
திரிமலத்தே - (ஆணவம், கன்மம், மாயை ஆகிய ) மும்மலங்களிலே
குளிக்கும் - பந்தப் பட்டுத்தான் இருக்கும் (ஆகையால் அவ்வுயிர்)
அருள் கூடும்படி - (தீக்ஷ¡க் கிரமத்தினாலே மல நீக்கம் பெற்றுத் ) திருவருளைப் பொருந்தும்படி
கொடி கட்டினன் - (நான்) துவசங் கட்டினேன்.
குறிப்பு :- பதவுரையில் இடதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் உரைநடையாகும்.  வலதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் பொழிப்புரையாகும்.
 
கருத்து
    சிவஞானம் ஒன்று ஆணவ மலம் மற்றொன்று இவ்விரண்டற்கும் தங்குமிடம் உயிர்.  அவ்விரண்டனுள் ஒன்று மேலிட்டபோது மற்றொன்று மறையும்.  ஆனாலும் ஆணவ மலம் சிவஞானத்தைப் பந்தியாது.  சிவஞானம் உயிர்க் குயிராகும், அதனறிவை விளக்கும்.  உயிர் செய்த பூர்வ புண்ணிய விசேடத்தால் அதன்பால் அந்த ஞானம் சிறிது விளங்கக்கூடும்.  ஆனாலும் அவ்வுயிர் மும்மலபந்தம் நீங்கப் பெறாது.  அவ்வுயிர்க்குத் தீக்கைப்பேறு அவசியம்: அதனால் அவ்வுயிர் அம் மல நீக்கம் பெறும், திருவருளிற் பொருந்தும்.  அது நிகழும்படி நான் கொடியை யேற்றினேன்.
விளக்கம்
    ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்:- தத்துவங்கள் முப்பத்தாறு.  அவற்றுள் ஒன்று ஆங்கார மென்பது.  அது மூவிதம்.  சாத்துவிக அகங்காரம்.  இராசத அகங்காரம்.  தாமச அகங்காரம் என்பன அவை.  சாத்துவிக அகங்காரத்தில் சத்துவ குணம் மேலிட்டிருக்கும்: இராசத தாமத குணங்கள் அடங்கி யிருக்கும்.  இராசத அகங்காரத்தில் இராசத குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ தாமச குணங்கள் அடங்கியிருக்கும்.  தாமச அகங்காரத்தில் தாமச குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ இராசத குணங்கள் அடங்கியிருக்கும்.  தாமத அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய சத்துவ குணம் பரிணமிப்பதா லுண்டாவதே ஒளி.  சாத்துவிக அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய தாமத குணத்தின் சாரம் பரிணமித்து இருளாகும்.  இருள் மறைக்கும்.  ஒளி விளக்கும்.  ஆகலின் அவ்விரண்டும் மறுதலைப் பொருள்கள்.  ஆயினும் அவை ஏக காலத்தில் ஒரே யிடத்தி லிருப்பன.  அதனை 'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்' என்றது கவி.
    ஒன்று மேலீடில் ஒன்று ஒளிக்கும்:- பகலிலும் இருள் உண்டு.  இரவிலும் ஒளியுண்டு.  பகலில் இருளில்லை யென்றால் வெயிற் காலத்தில் மரத்தினடி முதலிய விடங்களில் நிழல் உண்டாத லில்லை.  இரவில் ஒளியில்லை யென்றால் கார்காலத்தில் இருள் நடுவில் மின்னல் உண்டாத லில்லை.  பகலில் ஒளி மிக்கிருக்கும்.  இருள் அதி லடங்கிக் கிடக்கும்.  அத்தனையே.  இருள் கண்ணைக் கவர்ந்து நிற்கும் போது கண் எதனையுங் காண மாட்டாமல் மயங்கும்.  ஒளி கண்ணைக் கவர்ந்த போது கண் பொருளைக் காணும் விளக்கம் பெறும்.  இருள் மேலிட்டால் ஒளி மடங்கும், ஒளி மேலிட்டால் இருள் மடங்கும் என்பதற்குப் பொருள் அதுவே.  அதனை 'ஒன்று மேலிடில் ஒன்று ஒலிக்கும்' என்றது கவி.
    இருள் அடராது:- ஒளி போல்வது சிவம்.  இருள் போல்வது மலம்.  கண்போல்வது உயிர்.  சிவமும் மலமும் பகைப் பொருள்கள்.  அவை ஏக காலத்தில் உயிர்மாட்டுள்ளன.  சிவம் நிலைபெற்று விளங்கும் ஞானத்தை யுடையது.  அந்த ஞானம் சூக்குமம்.  அது விளங்குதற்கு வியஞ்சகம் வேண்டாம்.  மலம் அந்த ஞானத்தைப் பந்தியாது.  ஞாயிற்றின்முன் இருள்போல் அம்மலத்துக்குச் சிவத்தின்முன் செயலில்லை.  'இருள் அடராது' என்ற அடிக்குப் பொருள் அது.
    உயிர்க்கு உயிராய் உள்தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே குளிக்கும்:- உயிரறிவு ஏகதேசம்.  அது தூலம்.  ஆதலின் வியஞ்சகமின்றி அது விளங்காது.  அதனைப் பற்றிக்கொண்டது மலம்.  அதாவது உயிரே மலவயப்பட்டு மயங்குகிறதென்பது.  அதுதான் மலம் மேலிட்ட நிலை உயிருக்கு மேலிட வேண்டுவது சிவத்துவம்.  அது மேலிடின் அவ்வுயிரி னறிவு விளங்கும்.
    உயிரிற் சிவம் ஒன்றி யிருக்கிறது.  உயிர் மலச்சூழலிற்பட்டுக் கிடக்கும்போதும் சிவம் அதற்குத் தோன்றாத் துணையே.  உயிர் பிறவி தோறும் புண்ணியங்களைச் செய்யும்.  அப் புண்ணியத்துக்குப் பயனுண்டு.  சிவம் அவ் வுயிர்மாட்டு ஓரளவிற்கு விளங்கித் தோன்றுவதே அப் பயன்.  ஆயினுமென்? அம் மலச் சூழல் அவ் வுயிருக்கு அறவே நீங்காது.  அதனை 'உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கும்' என்றது கவி.
    அருள் கூடும்படி:- உயிர் புண்ணியத்தைச் செய்ய வேண்டும்.  புண்ணியங்கள் பல.  அவை இருவகையா யடங்கும்.  ஒன்று பசுபுண்ணியம்.  வேள்வி முதலிய அது.  இன்னொன்று பதிபுண்ணியம்.  சரியையாதிய அது.  உயிர் தான் செய்த புண்ணியங்களுக்குத் தக மேன்மேற் சமயங்களிற் போய்ப் பிறக்கும்.  ஆயின் அது சைவத் திறத் தடைதல் அருமையினும் அருமை.  அதில் அவ் வுயிர் சரியை கிரியா யோகங்களைச் செய்து ஞானத்தைப் பெறும்.  சரியை யாதிகள் போலச் சிவதீக்கையும் வேண்டப்படுவதே.  உயிரை அதன் நல்வினைப் பயனால் மேல்நோக்கிச் செலுத்துவது திரோதான சத்தி.  அது மலத்தைப் பற்றி நின்று தொழிலாற்று.  அ·தாவது அம்மலத்தைப் பாகப்படுத்தலாம்.  பாகம் - பக்குவம்.  மலம் பரிபாகம் அடைந்து தேய்ந்து கொண்டே வரும்.  மலப்பிணிப்பு நெகிழ்தலே அத் தேய்வு.  அத்திரோதான சத்தி, சிவத்தின் கருணை மறம்.  கருணை மறம் - மறக் கருணை.  மலம் தேயத் தேய அக் கருணை சிறிது சிறிதெ அறக் கருணையாக மாறி உயிரின்மாட்டுப் பதியும்.  அறக் கருணை - கருணை.  அதுதான் சிவத்தின் சிற்சத்தி.  சிற்சத்தி - பராசத்தி.  அப் பராசத்தி உயிரின் மாட்டுப் பதிவது சத்திநிபாத மெனப்படும்.
    உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை.  அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும்.  சமய தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும்.  அத் தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப் பயனே.  அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும்.  அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும் உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத் தரா.  அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம்.  ஞானமொன்றே வீடு பேற்றை நேரே யருளும்.
    தீக்கை யென்பதற்கு மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தலென்பது பொருள்.  அதனை உயிர்க்குச் சற்குறவன் செய்வன்.  அது சிவத்தின் கிரியாசத்தி வியாபாரம்.  கிரியாசத்தி, ஞானசத்தியின் வேறன்று.  ஆகலின் அத்தீக்கை மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் கூடுமென்க.  அத் தீக்கையின் விதங்களும் பல.  அவை சாதாரம் திராதாரமென இரண்டாயடங்கும்.  நிராதார தீக்கை பிரளயாகல விஞ்ஞான கல வுயிர்களுக்குச் செய்யப்படுவது.  சகல உயிர்களுக்கு ஆவது சாதார தீக்கை.  சிவம் குருமூர்த்தியினறிவில் தங்கி அருளுமுறையே.  சாதார தீக்கை, அதுவும் மல பரிபாகத்துக்கேற்பப் பலவகையாம்.  அவற்றுட் சிறந்தது ஒளத்திரி யென்பது.  நயனம், பரிசம், மானதம், வாசகம் சாத்திரம், யோகம் என்பன ஒளத்திரிக்கு அங்கமாகவும், அங்கமல்லாமற் சுதந்திரமாகவுஞ் செய்யப்படும்.  ஒளத்திரியும் ஞானவதி, கிரியாவதி, யென்றிருவகைத்து.  சதாசாரியன் பக்குவமடைந்த வுயிருக்கு அவ்விரண்டனு ளொன்றைச் செய்வன்.  அவ்வுயிர் எடுத்த வுடம்பால் அனுபவிக்கும் வினைப் பகுதி பிராரத்த மெனப்படும்.  அதுபோக.  எஞ்சி நின்ற பகுதி சஞ்சிதமாகும்.  அது பற்றிக்கிடப்பதற்கு இடங்கொடுத்து நிற்பன ஆறத்துவாக்கள்.  அவை மாயே யமல மெனப்படும்.  அம் மலமும், அவ் வினையும் தீக்கையாற் சுத்தியாகும்.  சுத்தியாதலாவது ஒழிதல்.  தீக்கை சிவத்தின் கிரியா சத்தியாதலால் அது அச் சுத்தியைச் செய்யுமென்பது பொருந்தும்.  ஆணவ மலமும், ஆகாமிய வினையும் சிவத்தின் ஞானசத்தியால் ஒழியற்பாலன.  பிராரத்தத்தை அவ்வுயிர் அனுபவித்துத் தொலைக்கும்.  உயிரின் பிறவிக்கு ஹேது ஆணவ மலம்.  உயிரினிடம் சிவம் பிரகாசித்தற்கு ஹேது ஞானம்.  தீக்கையோ அத்துவ சுத்தி செய்யு முகத்தால் அந்த ஆணவ மலத்தைக் கெடுத்து அந்த ஞானத்தை யுதிப்பிக்கும்.  கவியிலுள்ள அருள்' என்றது அந்த ஞானம்.
 
இரண்டாம் பாட்டு
 
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
பதவுரை
பொருள் - பொருள்களிலே
ஆம் பொரு§ள் ஏது - உள் பொருளாகிய சிவம் ஏது? (இல்லை)
போது ஏது -கிரணத்தை உவமையாக உடைய சத்தி ஏது? (இல்லை)
கண் ஏது - கண்ணை உவமையாக உடைய உயிர் ஏது? (இல்லை)
இருள் ஆம்  - அஞ்ஞானமாகிய
வெளி ஏது - சகலாவத்தை ஏது (இல்லை)
இரவு ஏது - கேவலாவத்தை ஏது (இல்லை)
என்று சொல்லும் மந்த மதியினருக்கு நல்லறிவு கொளுத்தும் பொருட்டு அத்தனை பொருள்களும் உள்ளவையே என்று உறுதி கூறி)
அருளாளா - திருவருள் நிறைந்த சிவபெருமானே!
நீ புரவு ஆ வையம் எல்லாம் - நீ ஆண்டருளுதல் பொருந்திய உலக முழுவதும்
(அறிய) தெரிந்துகொள்ளும்படி
நீ அறிய - நீயே சாக்ஷ¢யாக
கோபுர வாசல் - திருக்கோபுர வாசலிலே
கொடி கட்டினேன் - (நான்) துவசங் கட்டினேன்
கருத்து
    பொருள்கள் பல.  அவற்றுட் சிவம், சத்தி, உயிர், சகலம், கேவலம் என்பன முக்கியம்.  அவையெல்லாம் இல்லாதன என்பர் மூடர்.  சிவபிரானே! நீ ஆண்டருளுதலை யுடையது உலகம்.  அது சாட்சி.  நீயுஞ் சாட்சி.  அவ்வனைத்தும் உள்ளனதா னென்று நான் சத்தியஞ் செய்து உன் கோபுர வாசலிற் கொடி கட்டினேன்.
விளக்கம்
    ஆம் பொருள் ஏது:- வேத சிவாகமங்களே முழுமுதல் நூல்கள்.  அவை சிவத்தையே முழுமுதற்பொருளென்னும்.  அதனை யுடன்படுஞ் சமயம் சித்தாந்த சைவம்.  ஆகலின் அ·தொன்றே சர்வத்ர ஆஸ்திகம்.  அச்சிவம் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அதீதமானது.  அகச்சமயங்கள் ஆறு.  அவை பாடாணவாத சைவம் முதலியன.  லயபோக அதிகார சிவன்களே அவற்றிற்குப் பரம்பொருள்.  ஆகலின் அவை சித்தாந்த சைவத்துக்கு அணுக்கமாகிய ஆஸ்திகங்களாம்.  அச்சிவன்களுக்குரிய தத்துவங்கள் ஐந்து.  அவை சுத்தம்.  அவ்வைந்தும் போக எஞ்சியுள்ளன முப்பத்தொன்று.  அவற்றுள்ளும் ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒவ்வோ ரதிபதியாகப் பலருளர்.  அவருள் ஒவ்வொருவரை ஏனைச் சமயங்களுள் ஒவ்வொன்று பரம்பொருளெனக் கொள்ளும்.  அது உடையனல்லாதானை உடையனெனக் கொள்வதாகும்.  உடையன் - பரம்பொருள்.  ஆகலின் அச்சமயங்களை ஒருசேர நாஸ்திகங்களெனக் கூறிவிடலாம்.  சிவபரத்துவத்தில் நிச்சய புத்தி நூலறிவால்மட்டில் சித்தியாது.  அதற்குத் திருவருட் கண்ணும் வேண்டும்.  வியாதன் வேத பண்டிதன்றான்.  ஆயினும் அவனுக்கு ஞானக்கண் இல்லாது போயிற்று.  ஆகலின் வேதப்பொருளாவார் விட்டுணுவேயென அவன் பொய்யுரைத்துத் துயரெய்தினான். 'வ