Home Saivaite
way of Living
Saivaite Rules
Ultimate and Only God Shiva
| Kodi Maram Kavithai in Unicode Tamil |
|
உ
திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
அருளிச் செய்த
கொடிக்கவி
உரையாசிரியர்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை
Quick Navigation to more Saivism Links :
--------------------------------------------------------------------------------
ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் துதி
பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்
பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்ட இரு தயகமல முகைகளெல்லாம் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம் (அருணந்தி தேவ நாயனார்)
ஸ்ரீ உமாபதி தேவ நாயனார் துதிப் பாடல்கள்
அடியார்க் கெளியன் எனத்தில்லை
அண்ணல் அருளுந் திருமுகத்தின் படியே பெற்றான் சாம்பாற்குப் பரம முத்தி அப்பொழுதே உடலும் கரைவுற் றடைந்திடுவான் உயர்தீக் கையினை அருள்நோக்கால் கடிதிற் புரிகொற் றங்குடியார் கமல மலரின் கழல்போற்றி.
திருவார் கயிலைத் திருநந்தி தேவர் திருமரபில்
வருமா சிரியன் மறைஞான சம்பந்த மாகுரவன் அருள்சார் உமாபதி தேகிகன் செஞ்சர ணாம்புயமென் மருவார் மலரிணை யுள்கி வழுத்தி வணங்குதுமே.
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
ஆசியுரை
பழனி காசிவாசி சித்தாந்த சரபம்
மகாமகோபாத்தியாய சிவாகம ஞானபானு ஈசான சிவாசாரிய சுவாமிகள்
கொடிக்கவி, சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று; 'சைவ
சித்தாந்த சாத்திரம்,' மெய்கண்ட சாத்திரம் என
வழங்கப்பெரும். சைவம் சிவசம்பந்தமுடையது: சித்தாந்தம்
சிவாகமங்கள். 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பது
சித்தியார். ஆகமம் ஆப்தனால் சொல்லப்பட்டது. ஆப்தன்,
உண்மை உரைப்போன்; மெய்கண்டவன்; மெய்ந்நெறியை வகுத்தோன்;
மெய்கண்டான். அவர் சிவபெருமானே: அவரே அநாதி
மெய்கண்டார்: அவர் 'பரகுரு': திருநந்தி தேவர் முதல்
பரஞ்சோதி முனிவர்வரை யுள்ளோர் 'பரபரகுரு'.
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் 'அபரகுரு' அநாதி
மெய்கண்டார்வழி வந்தமையின் சைவசித்தாந்த சாத்திரம் 'மெய்கண்ட
சாத்திரம்' என வழங்கப்பெறும். அவ்வாறு வழங்கப் பெறுவது
இக் கருத்துப் பற்றியேயாகு. அத்துணை, மெய்கண்ட
சாத்திரங்கள் பதினான்கு, திருவுந்தியார் முதல் சங்கற்ப
நிராகரண மீறானவைகளாம். இவை, பதி, பசு, பாசம் என்ற
முப்பொருளுண்மை கூறுமுகத்தால், நியாய தருக்க நெறி
பிறழாமல், சித்தாந்த சைவச் சிறப்பினை தெரித்துணர்த்தி,
சாதனமும் பயனும் ஒப்பக் கூறுதலால், சாஸ்திரப்
பிரபஞ்சங்களுள் வியாபகமானவை. ஏனைய சாஸ்திரங்கள்
வியாப்பியமாம். புலன்களுக்கு அடிமைப்பட்டு அவற்றிற்கு
ஆவனவே செய்து அவற்றின் வழியில் அழுந்தி அலமரும்
உயிர்களை அத்துன்பச் சூழலினின்று கடப்பிக்கும் நூல்கள்
'சாத்திரங்கள்' எனப் போற்றப்படும். மேலே சுட்டிய
முப்பொருள்களை உணர்த்துவதோடமையாது, அந்தப்
பொருள்களையும் அவற்றின் பகுதியவாகிய, சிவம், சத்தி,
உயிர், உயிரறிவை மறைக்கும் மலம், அம் மறைப்பு
நீங்குந்தனையும் துணையாக நிற்கும் மாயை, மாயா கருவிகள்
கூடுதலால் உண்டாம் சகல நிலை, நீங்குதலால் வரும் கேவல
நிலை, இவைகளையும் இல்லை எனக் கூறும் கோளை மறுத்து இவை
உள்பொருள்களே எனப் பிரதிக்ஞை செய்து சிவசந்நிதியிலே,
எந்த முயற்சியுமின்றி விருஷபத் துவசக்கொடிமேல்
நோக்கிச்சென்று பறந்திடுமாறு செய்தலின் இது கொடிக்கவி
என்னும் அப் பெயர் பெற்றது. தீக்ஷ¡கரமத்தால் உயிர்கள்
அருள் பொருந்துமாற்றைத் தெரிப்பது: ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை
ஓதி உய்யுமாறு அவற்றின் வகையும் சிறப்பும் கூறுவது.
ஏனைய பதின்மூன்று சாத்திரங்களில் கூறப்படும் உண்மைகளைச்
சிவசந்நிதியில் பிரதிக்ஞா ரூபமாக இனிது நாட்டுவது
இந்நூல்.
இதனைத் தெளிந்த உரையுடன் நமக்கு உபகரிப்பவர்கள்,
நமது சைவசித்தாந்த பண்டிதர் சைவத்திருவின் சார்வே
பொருள் எனக் கொள்ளும் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள்
ஆவர். இவர்கள் சித்தாந்த சைவபரிபாலனமே தமக்குரிய
கடப்பாடாகக் கொண்டு பணிபுரியும் ஞானவீரர்: புறச்சமய
நிராகரணமும் சுவமதத் தாபனமுமே தமது வாழ்நாளின்
பரமலக்ஷ்யமாமெனக்கொண்டு வாழ்கின்றவர்கள். இந்தத்
தெளிந்த உரை, அந் நூற்பொருளை யுணர்தற்குச் சிறந்த
சாதனமாம். இந்த உரையின் வாயிலாகச் சைவ நன்மக்கள்
சிவஞானப் பேறு பெறுவர் என்பது திண்ணம்.
சைவசித்தாந்த ஞானநூற்பிரவேசம், முறையால்
சிவநேசர்கள் பால் வளர்க. (உமாபதி சிவம்) 'குருவருள்'
துணை புரிவதாக.
ஈசான சிவாசாரியர்
--------------------------------------------------------------------------------
உ
சிவமயம்
பதிப்புரை
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற ஒளவையார்
வாக்கைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களில்
திருநெல்வேலியுறை செல்வர்கள் பாராட்டப் பெற்றவர்கள்.
திருநெல்வேலியின் ஒரு பகுதியான திருமங்கை நகரம் என்னும்
பேட்டையில் கொல்லம் 1014ம் ஆண்டில் சேனையர் மரபினர் ஒரு
விநாயகர் கோவில் கட்டத் தீர்மானித்து வாணம்
வெட்டும்போது வெல்லக் கட்டியுடன் ஒரு விநாயகர் உருவமும்
தென்பட்டது. அந்த விநாயகரையே கோவில் கட்டி
முடிந்தவுடன் சைவத்திரு.பூலாம் மூப்பனார் அவர்களும்,
சப்பாணி மூப்பனார் அவர்களும் பிரதிஷ்டை செய்து
சர்க்கரைக் கட்டியுடன் அவ்விநாயகர் காட்சிகொடுத்த அருளை
எண்ணி, அவருக்கு "சர்க்கரை விநாயகர்" என்று
திருநாமமிட்டு வணங்கி வருகிறார்கள். கொல்லம் 1034ம்
ஆண்டு தை மீ சதய நட்சத்திர நன்னாளில் பேட்டை சைவத்திரு
பொ.பேச்சிமுத்து மூப்பனார் அவர்களும் அவர்கள்
சகோதரர்கள் சைவத்திரு. பொ.இராமலிங்க மூப்பனார்
அவர்களும், சைவத்திரு, பொ.திரவிய மூப்பனார் அவர்களும்
சேர்ந்து கர்ப்பக்கிரஹம் கட்டி மூலஸ்தானத்தில் விநாயகர்
புதிய மூர்த்தி பிரதிஷ்டை செய்து முதல் முதல்
கண்டெடுத்துப் பிரதிட்டை செய்து வணங்கிவந்த சர்க்கரை
விநாயகரை முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.
அப்புண்ணியசீலர் பொ.பேச்சிமுத்துமூப்பனார் அவர்களின்
வழி வந்தவர்கள் சைவத்திரு.பே.சி.சு.ந. சங்கரநாராயணன்
அவர்கள். சைவத்திருப்பணியில் ஈடுபட்டு முன்னோர்கள்
எழுதி வைத்த தர்மங்களை முறை தவறாது நடத்திவரும் பேறு
பெற்றவர்கள். மேற் கூறிய சர்க்கரை விநாயகர் கோவிலில்
எழுந்தருளப் பெற்றிருக்கும் ஸ்ரீசந்திரசேகரப்
பெருமாளுக்கு, தில்லைச் சிதம்பரத்தை அனுசரித்து மார்கழி
மீ உற்சவமும் சுவாமி எழுந்திருந்து முதலானவையும்
சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்வுற்சவத்தின்
கொடியேற்றுவிழாக் கட்டளையும் ஸ்ரீ சங்கரநாராயணன்
அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நடத்தி வருகிறார்கள்.
அக்கொடியேற்று விழாவன்று இக்'கொடிக்கவி' என்னும் நூல்
திரு.சங்கரநாராயணன் அவர்களாலேயே வெளியிடப்படுகிறது.
எடுத்த இப்பிறப்பிலே சித்தாந்த சாத்திரங்களின் பொருள்
தெரிந்து, ஓதி, ஞானாசிரியர் திருவடியடைந்து, உபதேசம்
பெற்று, அவ்வுபதேச நெறியில் வழுவாமல் நின்று ஒழுக
வேண்டும் என்ற குறிப்பை ஸ்ரீ உமாபதி சிவாச்சார்ய
சுவாமிகள் இக்கொடிக்கவியில் அருளிச்
செய்திருக்கிறார்களாதலாலே, அந்நூலைப் பலரும் ஓதி உய்ய
வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலை வெளியிட
முன்வந்த திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி
செலுத்த நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
அப்புண்ணிய சீலருக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் சகல
சம்பத்துக்களும், மென் மேலும் பெற்று வாழ
அருள்புரிவாராக.
இக்கொடிக்கவி நூலுக்கு எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி
விளக்கமாக உரையெழுதித்தந்த சித்தாந்த பண்டித பூஷணம்
சைவத்திரு.ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளை அவர்கள்,
ஸ்ரீசர்க்கரை விநாயகர் எழுந்தருளியிருக்கும் பேட்டை
நகர வாசியும், தமது வீடு மனை முதலியவற்றை ஸ்ரீ
மெய்கண்ட சிவாச்சாரிய சுவாமிகள் குருபூசை முதலிய
தர்மங்களுக்கு உரிமைப்படுத்தித் தமது கால்வழிகளை
அவ்வாச்சாரிய சுவாமிகளுக்கு அடிமை யாக்கியவர்களுமான
ஸ்ரீலஸ்ரீ த.ஆறுமுகநயினார் பிள்ளை யவர்களது மூத்த
புதல்வர். அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும்
சித்தாந்தச் செந்நெறிக்கே அர்ப்பணம் செய்துவரும்
தவசிரேஷ்டர்.
"இந்நூலுக்குப் பல பழைய உரைகள் உண்டு. அத்தனை
உரைகளிருப்பினும், இப்பொழுது ஸ்ரீ ஈசுரமூர்த்திப்
பிள்ளையவர்கள் எழுதி யுபகரித்த உரையும்
வேண்டற்பாலதேயாகும். தமிழ்க் கல்வியும் சைவசமய
நூலுணர்வும் குறைந்து மேனாட்டு நாகரிகம் மிதந்து
கிடக்கும். இக்காலத்தில் ஸ்ரீமான் பிள்ளையவர்கள்
சைவர்கள் அனைவரும் சமய சாத்திரங்களை எளிதிற்
கற்றுணர்ந்து சமய ஞானம் பெறுமாறு இந்நூலுக்குத்
தெளிவான பதவுரை கருத்துரை யென்பன எழுதி வெளியிட்ட
பேருதவிக்குச் சைவ உலகமும் தமிழுலகமும் என்றும் நன்றி
பாராட்டும் கடப்பாடுடையன."
என்று சைவத் திரு வீ. சிதம்பரராமலிங்க
பிள்ளையவர்கள் (காலஞ் சென்ற துறைசை ஆதீன வித்வான்)
இந்நூலின் முதற்பதிப்புக்கு ஆசியளித்திருக்கின்றார்கள்
என்றால் நம்போல்வர் அவர்களது பெருமையை எடுத்துப்
பேசுவது மிகையாகும். ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
அவர்களுக்கும் இக்கழகத்தார் நன்று செலுத்துவதுடன்,
இவ்வாறே பல சைவத் தொண்டு புரிவதற்கு அவர்களுக்குத்
திருவருள் சுரக்கும்படி, ஸ்ரீ காந்திமதியம்பா சமேத ஸ்ரீ
நெல்லையப்பரைப் பிரார்த்திக்கிறோம்.
சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார்
திருநெல்வேலி டவுண் 17-12-1958 --------------------------------------------------------------------------------
உ
சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
கொடிக்கவி
(விளக்கம்)
தோற்றுவாய்
மெய்கண்ட *சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள்
ஒன்று கொடிக்கவி யென்பது. அதற்கு ஆசிரியர் ஸ்ரீமத்
உமாபதி சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் தில்லைத்
திருவுடையந்தண குல தீபமாய் விளங்கியவர்கள்.
அத்தலத்தில் ஸ்ரீமத் நடராஜப் பெருமானாரின் திருவிழா
வந்தது. அக்காலைக் கொடியேற்றுமுறை அவ்வாசாரிய
சுவாமிகளுக்குரியதாயிற்று. ஆனால் மற்றை வேதியர்களால்
அவர்கள் அவ்வுரிமையினின்றும் விலக்கப்பட்டிருந்தார்கள்.
விலக்கிய சில வேதியர் அக் கொடியை ஏற்ற முயன்றனர். கொடி
ஏறவில்லை. திகைத்தன ரவர். 'எம் அன்பன் உமாபதி சிவன்
வந்து ஏற்றினால் அ·தேறும்' என்று தாண்டவயர் அதனைக்
கேட்டு அவ்வாசாரிய சுவாமிகள் இருக்குமிடஞ் சென்று
அவர்களை வணங்கிச் சிவபிரானாரின் அருளிப்பாட்டை
விண்ணப்பித்து, வந்தருளுமாறு வேண்டினர். சர்வலோக
சரண்யராகிய பரசிவப் பிரபுவின் திருவடிப்பற்றையே
பற்றாகக்கொண்டு அவரருள்வசமாய் நின்று வரும் ஸ்ரீ மத்
சுவாமிகள் அச் சிவாஞ்ஞையைச் சிரமேற் கொண்டு ஆலயத்துக்கு
வந்து இரு கரங்களையுங் கூப்பிக் கூத்துடைப்
பெருமானாரைச் சிந்தித்த வண்ணமாய் நின்று நான்கு
திருப்பாட்டுக்களைப் பாடியருளினார்கள். கொடிதானாக
ஏறியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். வான
வாத்தியங்கள் முழங்கின. ஆங்குக் குழுமியிருந்த வேதியர்
முதலிய அனைத்துச் சிவபக்த சீலர்களும் ஹர ஹர முழக்கஞ்
செய்தார்கள். அந்நான்கு பாட்டுஞ் சேர்ந்து கொடிக்கவி
யென்னும் இந் நூலாயிற்று. இது கொடிப்பாட்டு எனவும்
படும். முதற் பாட்டுக் கட்டளைக் கலித்துறை. மற்றவை
வெண்பாக்கள்.
கொடிமரம் சிவமயம், கொடிச்சீலை திரோதன் சத்தி; அதில்
வரையப்பட்டுள்ள இடபம் உயிர். கொடிக் கயிறு அருள்.
அதனோடியைந்துள்ள தருப்பைக் கயிறு பாசம். சிவபிரான்
ராஜாதி ராஜர். உயிர்கள் அவரின் குடிகள். அக் குடிகளை
வருத்தும் வேடராதியோர் பாச வகைகள். அவரை யொழித்து அவ்
வுயிர்களைத் தம்பா லாக்கிப் பரிபாலிப்பவர் அச் சிவ
ராஜரே. அத்திறன் அவருக்கேயுண்டு. அவர் திருமுன்
ஏற்றப்படுங் கொடி அவ்வுண்மையை விளக்கும். கொடி
ஏறுகின்றது. வேடரெல்லாஞ் சத்தி கெட் டோடுகின்றனர்.
உயிர்களெல்லாம் உய்தி கூடிப் பேரின்ப வாழ்
வெய்துகின்றன. வைதிக சைவ ராஜாங்க கெளரவ மன்றோ அவ்
விடபக் கொடி. அது கம்பீரமாய்ப் பறந்திடுக.
* மெய்கண்ட சாத்திரங்கள் 14
நூல் ஆசிரியர்
1. சிவஞான போதம் ஸ்ரீ மெய்கண்ட தேவ சுவாமிகள் 2. சிவஞான சித்தியார் (சுபக்கம், பரபக்கம்) ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் 3. இருபா இருப·து ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் 4. திருவுந்தியார் திருவியலூர் ஸ்ரீ உய்யவந்த தேவர் 5. திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் ஸ்ரீ உய்யவந்த தேவர் 6. உண்மை விளக்கம் திருவதிகை ஸ்ரீ மனவாசகங் கடந்தார் 7. சிவப்பிரகாசம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 8. திருவருட்பயன் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 9. வினா வெண்பா கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 10. போற்றிப்ப·றொடை கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 11. கொடிக்கவி கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 12. நெஞ்சுவிடுதூது கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 13. உண்மை நெறி விளக்கம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் 14. சங்கற்ப நிராகரணம் கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
--------------------------------------------------------------------------------
முதற் பாட்டு
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட
மொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளடரா துள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும்படி கொடி கட்டினனே.
பதவுரை
ஒளிக்கும் - சிவஞானத்துக்கும்
இருளுக்கும் - ஆணவமலத்துக்கும்
ஒன்றே இடம் - ஆன்ம வர்க்கம் ஒன்றுமட்டுமே தங்கு
மிடமாகும்
ஒன்று மேலிடில் - சிவஞானம் ஆணவ மலமாகிய
[இரண்டனுள் ஒன்று மேலிட்ட காலத்தில்
ஒன்று ஒளிக்கும் - மற்றொன்று மறைந்து விடும்
எனினும் - என்றாலும்
இருள் - ஆணவ மலமானது
அடராது - (சிவஞானத்தைப்) பந்தியாது
உயிர்க்கு உயிராய் - எல்லா உயிர்களுக்கும் உயிராகி
உள்தெளிக்கும் - அவைகளறிவை விளக்குகின்ற
அறிவு - சிவஞானமானது
திகழ்ந்து உளதேனும் - (பூர்வ புண்ணிய
விசேடத்தினால்சிறிது)
உயிர் - அவ்வான்மா [ஆன்மாவின் மாட்டு விளங்கினாலும்]
திரிமலத்தே - (ஆணவம், கன்மம், மாயை ஆகிய )
மும்மலங்களிலே
குளிக்கும் - பந்தப் பட்டுத்தான் இருக்கும் (ஆகையால்
அவ்வுயிர்)
அருள் கூடும்படி - (தீக்ஷ¡க் கிரமத்தினாலே மல நீக்கம்
பெற்றுத் ) திருவருளைப் பொருந்தும்படி
கொடி கட்டினன் - (நான்) துவசங் கட்டினேன்.
குறிப்பு :- பதவுரையில் இடதுபுறம் எழுதப்பட்டிருக்கும்
வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் உரைநடையாகும்.
வலதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக
ஓதப்பெறின் பொழிப்புரையாகும்.
கருத்து
சிவஞானம் ஒன்று ஆணவ மலம் மற்றொன்று இவ்விரண்டற்கும்
தங்குமிடம் உயிர். அவ்விரண்டனுள் ஒன்று மேலிட்டபோது
மற்றொன்று மறையும். ஆனாலும் ஆணவ மலம் சிவஞானத்தைப்
பந்தியாது. சிவஞானம் உயிர்க் குயிராகும், அதனறிவை
விளக்கும். உயிர் செய்த பூர்வ புண்ணிய விசேடத்தால்
அதன்பால் அந்த ஞானம் சிறிது விளங்கக்கூடும். ஆனாலும்
அவ்வுயிர் மும்மலபந்தம் நீங்கப் பெறாது.
அவ்வுயிர்க்குத் தீக்கைப்பேறு அவசியம்: அதனால்
அவ்வுயிர் அம் மல நீக்கம் பெறும், திருவருளிற்
பொருந்தும். அது நிகழும்படி நான் கொடியை யேற்றினேன்.
விளக்கம்
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்:- தத்துவங்கள்
முப்பத்தாறு. அவற்றுள் ஒன்று ஆங்கார மென்பது. அது
மூவிதம். சாத்துவிக அகங்காரம். இராசத அகங்காரம்.
தாமச அகங்காரம் என்பன அவை. சாத்துவிக அகங்காரத்தில்
சத்துவ குணம் மேலிட்டிருக்கும்: இராசத தாமத குணங்கள்
அடங்கி யிருக்கும். இராசத அகங்காரத்தில் இராசத குணம்
மேலிட்டிருக்கும்: சத்துவ தாமச குணங்கள்
அடங்கியிருக்கும். தாமச அகங்காரத்தில் தாமச குணம்
மேலிட்டிருக்கும்: சத்துவ இராசத குணங்கள்
அடங்கியிருக்கும். தாமத அகங்காரத்தில் அடங்கி யிருக்கு
மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய சத்துவ
குணம் பரிணமிப்பதா லுண்டாவதே ஒளி. சாத்துவிக
அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட
இரண்டு குணங்களில் ஒன்றாகிய தாமத குணத்தின் சாரம்
பரிணமித்து இருளாகும். இருள் மறைக்கும். ஒளி
விளக்கும். ஆகலின் அவ்விரண்டும் மறுதலைப் பொருள்கள்.
ஆயினும் அவை ஏக காலத்தில் ஒரே யிடத்தி லிருப்பன. அதனை
'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்' என்றது கவி.
ஒன்று மேலீடில் ஒன்று ஒளிக்கும்:- பகலிலும் இருள்
உண்டு. இரவிலும் ஒளியுண்டு. பகலில் இருளில்லை
யென்றால் வெயிற் காலத்தில் மரத்தினடி முதலிய விடங்களில்
நிழல் உண்டாத லில்லை. இரவில் ஒளியில்லை யென்றால்
கார்காலத்தில் இருள் நடுவில் மின்னல் உண்டாத லில்லை.
பகலில் ஒளி மிக்கிருக்கும். இருள் அதி லடங்கிக்
கிடக்கும். அத்தனையே. இருள் கண்ணைக் கவர்ந்து
நிற்கும் போது கண் எதனையுங் காண மாட்டாமல் மயங்கும்.
ஒளி கண்ணைக் கவர்ந்த போது கண் பொருளைக் காணும் விளக்கம்
பெறும். இருள் மேலிட்டால் ஒளி மடங்கும், ஒளி
மேலிட்டால் இருள் மடங்கும் என்பதற்குப் பொருள் அதுவே.
அதனை 'ஒன்று மேலிடில் ஒன்று ஒலிக்கும்' என்றது கவி.
இருள் அடராது:- ஒளி போல்வது சிவம். இருள் போல்வது
மலம். கண்போல்வது உயிர். சிவமும் மலமும் பகைப்
பொருள்கள். அவை ஏக காலத்தில் உயிர்மாட்டுள்ளன. சிவம்
நிலைபெற்று விளங்கும் ஞானத்தை யுடையது. அந்த ஞானம்
சூக்குமம். அது விளங்குதற்கு வியஞ்சகம் வேண்டாம்.
மலம் அந்த ஞானத்தைப் பந்தியாது. ஞாயிற்றின்முன்
இருள்போல் அம்மலத்துக்குச் சிவத்தின்முன் செயலில்லை.
'இருள் அடராது' என்ற அடிக்குப் பொருள் அது.
உயிர்க்கு உயிராய் உள்தெளிக்கும் அறிவு திகழ்ந்து
உளதேனும் திரிமலத்தே குளிக்கும்:- உயிரறிவு ஏகதேசம்.
அது தூலம். ஆதலின் வியஞ்சகமின்றி அது விளங்காது.
அதனைப் பற்றிக்கொண்டது மலம். அதாவது உயிரே மலவயப்பட்டு
மயங்குகிறதென்பது. அதுதான் மலம் மேலிட்ட நிலை
உயிருக்கு மேலிட வேண்டுவது சிவத்துவம். அது மேலிடின்
அவ்வுயிரி னறிவு விளங்கும்.
உயிரிற் சிவம் ஒன்றி யிருக்கிறது. உயிர்
மலச்சூழலிற்பட்டுக் கிடக்கும்போதும் சிவம் அதற்குத்
தோன்றாத் துணையே. உயிர் பிறவி தோறும் புண்ணியங்களைச்
செய்யும். அப் புண்ணியத்துக்குப் பயனுண்டு. சிவம் அவ்
வுயிர்மாட்டு ஓரளவிற்கு விளங்கித் தோன்றுவதே அப் பயன்.
ஆயினுமென்? அம் மலச் சூழல் அவ் வுயிருக்கு அறவே
நீங்காது. அதனை 'உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு
மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கும்' என்றது
கவி.
அருள் கூடும்படி:- உயிர் புண்ணியத்தைச் செய்ய
வேண்டும். புண்ணியங்கள் பல. அவை இருவகையா யடங்கும்.
ஒன்று பசுபுண்ணியம். வேள்வி முதலிய அது. இன்னொன்று
பதிபுண்ணியம். சரியையாதிய அது. உயிர் தான் செய்த
புண்ணியங்களுக்குத் தக மேன்மேற் சமயங்களிற் போய்ப்
பிறக்கும். ஆயின் அது சைவத் திறத் தடைதல் அருமையினும்
அருமை. அதில் அவ் வுயிர் சரியை கிரியா யோகங்களைச்
செய்து ஞானத்தைப் பெறும். சரியை யாதிகள் போலச்
சிவதீக்கையும் வேண்டப்படுவதே. உயிரை அதன் நல்வினைப்
பயனால் மேல்நோக்கிச் செலுத்துவது திரோதான சத்தி. அது
மலத்தைப் பற்றி நின்று தொழிலாற்று. அ·தாவது
அம்மலத்தைப் பாகப்படுத்தலாம். பாகம் - பக்குவம். மலம்
பரிபாகம் அடைந்து தேய்ந்து கொண்டே வரும். மலப்பிணிப்பு
நெகிழ்தலே அத் தேய்வு. அத்திரோதான சத்தி, சிவத்தின்
கருணை மறம். கருணை மறம் - மறக் கருணை. மலம் தேயத்
தேய அக் கருணை சிறிது சிறிதெ அறக் கருணையாக மாறி
உயிரின்மாட்டுப் பதியும். அறக் கருணை - கருணை.
அதுதான் சிவத்தின் சிற்சத்தி. சிற்சத்தி - பராசத்தி.
அப் பராசத்தி உயிரின் மாட்டுப் பதிவது சத்திநிபாத
மெனப்படும்.
உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும்
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை.
அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும். சமய
தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக்
கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண
தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும். அத்
தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப்
பயனே. அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக
அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும்.
அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும்
உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத்
தரா. அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம். ஞானமொன்றே
வீடு பேற்றை நேரே யருளும்.
தீக்கை யென்பதற்கு மலத்தைக் கெடுத்து ஞானத்தைக்
கொடுத்தலென்பது பொருள். அதனை உயிர்க்குச் சற்குறவன்
செய்வன். அது சிவத்தின் கிரியாசத்தி வியாபாரம்.
கிரியாசத்தி, ஞானசத்தியின் வேறன்று. ஆகலின் அத்தீக்கை
மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் கூடுமென்க. அத்
தீக்கையின் விதங்களும் பல. அவை சாதாரம் திராதாரமென
இரண்டாயடங்கும். நிராதார தீக்கை பிரளயாகல விஞ்ஞான கல
வுயிர்களுக்குச் செய்யப்படுவது. சகல உயிர்களுக்கு ஆவது
சாதார தீக்கை. சிவம் குருமூர்த்தியினறிவில் தங்கி
அருளுமுறையே. சாதார தீக்கை, அதுவும் மல
பரிபாகத்துக்கேற்பப் பலவகையாம். அவற்றுட் சிறந்தது
ஒளத்திரி யென்பது. நயனம், பரிசம், மானதம், வாசகம்
சாத்திரம், யோகம் என்பன ஒளத்திரிக்கு அங்கமாகவும்,
அங்கமல்லாமற் சுதந்திரமாகவுஞ் செய்யப்படும்.
ஒளத்திரியும் ஞானவதி, கிரியாவதி, யென்றிருவகைத்து.
சதாசாரியன் பக்குவமடைந்த வுயிருக்கு அவ்விரண்டனு
ளொன்றைச் செய்வன். அவ்வுயிர் எடுத்த வுடம்பால்
அனுபவிக்கும் வினைப் பகுதி பிராரத்த மெனப்படும்.
அதுபோக. எஞ்சி நின்ற பகுதி சஞ்சிதமாகும். அது
பற்றிக்கிடப்பதற்கு இடங்கொடுத்து நிற்பன ஆறத்துவாக்கள்.
அவை மாயே யமல மெனப்படும். அம் மலமும், அவ் வினையும்
தீக்கையாற் சுத்தியாகும். சுத்தியாதலாவது ஒழிதல்.
தீக்கை சிவத்தின் கிரியா சத்தியாதலால் அது அச்
சுத்தியைச் செய்யுமென்பது பொருந்தும். ஆணவ மலமும்,
ஆகாமிய வினையும் சிவத்தின் ஞானசத்தியால் ஒழியற்பாலன.
பிராரத்தத்தை அவ்வுயிர் அனுபவித்துத் தொலைக்கும்.
உயிரின் பிறவிக்கு ஹேது ஆணவ மலம். உயிரினிடம் சிவம்
பிரகாசித்தற்கு ஹேது ஞானம். தீக்கையோ அத்துவ சுத்தி
செய்யு முகத்தால் அந்த ஆணவ மலத்தைக் கெடுத்து அந்த
ஞானத்தை யுதிப்பிக்கும். கவியிலுள்ள அருள்' என்றது
அந்த ஞானம்.
இரண்டாம் பாட்டு
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி.
பதவுரை
பொருள் - பொருள்களிலே
ஆம் பொரு§ள் ஏது - உள் பொருளாகிய சிவம் ஏது?
(இல்லை)
போது ஏது -கிரணத்தை உவமையாக உடைய சத்தி ஏது?
(இல்லை)
கண் ஏது - கண்ணை உவமையாக உடைய உயிர் ஏது? (இல்லை)
இருள் ஆம் - அஞ்ஞானமாகிய
வெளி ஏது - சகலாவத்தை ஏது (இல்லை)
இரவு ஏது - கேவலாவத்தை ஏது (இல்லை)
என்று சொல்லும் மந்த மதியினருக்கு நல்லறிவு
கொளுத்தும் பொருட்டு அத்தனை பொருள்களும் உள்ளவையே
என்று உறுதி கூறி)
அருளாளா - திருவருள் நிறைந்த சிவபெருமானே!
நீ புரவு ஆ வையம் எல்லாம் - நீ ஆண்டருளுதல்
பொருந்திய உலக முழுவதும்
(அறிய) தெரிந்துகொள்ளும்படி
நீ அறிய - நீயே சாக்ஷ¢யாக
கோபுர வாசல் - திருக்கோபுர வாசலிலே
கொடி கட்டினேன் - (நான்) துவசங் கட்டினேன்
கருத்து
பொருள்கள் பல. அவற்றுட் சிவம், சத்தி, உயிர்,
சகலம், கேவலம் என்பன முக்கியம். அவையெல்லாம்
இல்லாதன என்பர் மூடர். சிவபிரானே! நீ ஆண்டருளுதலை
யுடையது உலகம். அது சாட்சி. நீயுஞ் சாட்சி.
அவ்வனைத்தும் உள்ளனதா னென்று நான் சத்தியஞ் செய்து
உன் கோபுர வாசலிற் கொடி கட்டினேன்.
விளக்கம்
ஆம் பொருள் ஏது:- வேத சிவாகமங்களே முழுமுதல்
நூல்கள். அவை சிவத்தையே முழுமுதற்பொருளென்னும்.
அதனை யுடன்படுஞ் சமயம் சித்தாந்த சைவம். ஆகலின்
அ·தொன்றே சர்வத்ர ஆஸ்திகம். அச்சிவம் முப்பத்தாறு
தத்துவங்களுக்கும் அதீதமானது. அகச்சமயங்கள் ஆறு.
அவை பாடாணவாத சைவம் முதலியன. லயபோக அதிகார
சிவன்களே அவற்றிற்குப் பரம்பொருள். ஆகலின் அவை
சித்தாந்த சைவத்துக்கு அணுக்கமாகிய
ஆஸ்திகங்களாம். அச்சிவன்களுக்குரிய தத்துவங்கள்
ஐந்து. அவை சுத்தம். அவ்வைந்தும் போக
எஞ்சியுள்ளன முப்பத்தொன்று. அவற்றுள்ளும் ஒவ்வொரு
தத்துவத்துக்கும் ஒவ்வோ ரதிபதியாகப் பலருளர்.
அவருள் ஒவ்வொருவரை ஏனைச் சமயங்களுள் ஒவ்வொன்று
பரம்பொருளெனக் கொள்ளும். அது உடையனல்லாதானை
உடையனெனக் கொள்வதாகும். உடையன் - பரம்பொருள்.
ஆகலின் அச்சமயங்களை ஒருசேர நாஸ்திகங்களெனக்
கூறிவிடலாம். சிவபரத்துவத்தில் நிச்சய புத்தி
நூலறிவால்மட்டில் சித்தியாது. அதற்குத் திருவருட்
கண்ணும் வேண்டும். வியாதன் வேத பண்டிதன்றான்.
ஆயினும் அவனுக்கு ஞானக்கண் இல்லாது போயிற்று.
ஆகலின் வேதப்பொருளாவார் விட்டுணுவேயென அவன்
பொய்யுரைத்துத் துயரெய்தினான். 'விச்சை நூல் பல
கற்பினுஞ் சிவனருள் விரவாக், கொச்சையோர் தமை
விடுவதோ கொடுமலஞ் செருக்கு' என்றது
காஞ்சிப்புராணம், 'ஆம் பொருள் ஏது?' என்ற அடி
உள்பொருளாகிய அச்சிவத்தை யில்லை யென்றபடி. இது
ஒரு சாரார் கூற்று.
போது ஏது:- உயிர் அறிகின்றது. அதற்குக்
கருவிகளா யுதவுவன எட்டு. அவை ஆன்மதத்துவம்,
தாத்துவிகம், கலையாதியன காலம், நியதி, உடம்பு,
பிரமாணம், நால்வகை வாக்கு என்பன.
அக்கருவிகளெல்லாஞ் சடம் (உயிரற்ற பொருள்).
அவ்வுயிரும் அறிவிக்க அறியும் இயல்புடையது. ஆகவே
உயிர் அக்கருவிகளைக்கொண்டு அறிதற்கு ஒரு சேதனப்
பொருளின் (உயிருள்ளபொருளின்) சகாயமும் வேண்டும்.
அச்சகாயந்தான் சிவசத்தியாகிய திரோதான சத்தி. அது
உயிருக்குக் கருவிகளைக் கூட்டியும், உள்நின்று
அறிவித்தும் வருகிறது. அவ்வுபகாரத்தால் உயிர்
முதலில் ஏகதேச அறிவைப் பெறும்; அதனால்
சிறுபோகங்களை நுகர்ந்து பிறவிகளிற் படும்.
காலாந்தரத்தில் அது பக்குவ மடைதலுஞ் சித்தம்.
அதுவும் அச்சத்தியால் உளதாவதே. அப்போது அச்சத்தி
அருட்சத்தியாக மாறி அவ்வுயிரின் வியாபக அறிவை
விளக்கும். அவ்வுயிருக்குப் பரபோகங் கிடைப்பது
அப்போதுதான். என்னே சிவசத்தியின் மகோபகாரம்!
ஆயினும் அதை அயர்த்து நிற்பார் எத்தனைபேர்!
உயிர்க்குத் தன்னளவில் அறியுஞ் சத்தியுண்டென்பர்
மீமாம்சகர். உயிர்க்குக் கருமமே அறிவைக் கொடுக்கு
மென்பர் ஆருகதர். மேற்காட்டிய தத்துவ
தாத்துவிகங்களே உயிரறிவை விளக்கத்துக்குச்
சிவசத்தியி னுபகாரத்தை யுடன்படார். நன்றி கொன்றலே
அது. 'போதேது' என்ற தொடர் அச்சிவசத்தியை யில்லை
யென்றபடி.
போது:- சிவம் நிர்க்குணம் என்னும்வேதம்.
நிர்க்குணம் - குணமில்லாதது. நிர்க்குணம்
என்பதற்கு எவ்வகைக் குணமு மில்லாமை யென்றனர்
மாயாவாதியர். குணங்கள் இரு வகை. ஒன்று மாயா
குணம். சத்துவம் இராசதம், தாமதம் என்பன அது.
இன்னொன்று இறைமைக் குணம். தன் வயத்தனாதல், தூய
வுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல்,
முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களி னீங்குதல்,
பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்ப
முடைமை யென்பன அது. சிவத்தினிட மில்லாதது அம்மாயா
குணம். அதனால் அச் சிவம் நிர்க்குணமெனப்பட்டது.
தன்வயத்தனாதல் முதலிய 1 எட்டுக் குணங்களும்
சிவத்தோ டபின்ன மானவை. அவை அச்சிவப் பொருட்குத் 2
தாதான்மிய சத்தியாகும். நிர்க்குணமென்ற சொல்லே
பற்றி அவ்விறைமைக் குணங்களையும் இல்லையென்றல்
தவறு. 'முதல்வன் இம் முக்குணங்களும்
கடந்தவனாகலான் இவற்றுளொன்றாக அறியப்படா னென்பார்
'நிர்க் குணனாய் என்றும்', 'நிர்க்குணன் என்பது
ஒரு குணமு மில்லான் என்றுரைப்பின் அது
தன்வயத்தனாதல் முதலிய எண் குணங்களை இயல்பாக வுடைய
முதல்வனுக் கேலாமையின் மாயாவாதி முதலியோர்
கூற்றாய் முடியுமென் றொழிக' என்றது ஸ்ரீ பாஷ்யம்.
மாயாவாதியர் கூறுவது கொடிது. 'போதேது?'
என்றதிலுள்ள போது என்பது அவ்விறைமைக் குணங்கள்.
கண் ஏது:- சிவம் முழுமுதற் பொருள். அதன்
அருட்சத்தி உபகரிப்பது. அவ்வுபகாரத்தை
யனுபவிக்கும் உரிமையுடையது உயிர். சிவம் மன்னவன்
போல்வது. உயிர் அவன் குமரன் போல்வது. மன்னவ
குமாரன் அறியாப் பருவத்திலிருந்து வேடர் சேரியில்
வளர்வானாயின் தன்னியல்பை மறந்து அவ்வேடரியல்பையே
தன்னியல்பாகக் கொண்டு அலமருவான். மன்னவனே
அப்பிள்ளைக்கு அவ்விழிவை யுணர்த்த வேண்டும்.
பரிவால் அவன் அதனை யாற்றுவான். அப்பிள்ளை
தெளிந்து அவ்வேடரைவிட்டு விலகித் தனக்கு உரிய அரசை
நோக்கித் திரும்புவான். அப்படியே உயிர் ஐம்புல
வேடரிடை வளர்ந்து தன்னியல்பை யயர்த்தது அது
உண்மையிற் சிவானுபவத்துக்கே யுரியது. சிவம்
அவ்வுயிர்க்கு அவ்வயர்ச்சியை நீக்கி
அவ்வனுபவத்தைக் கொடுக் கருணை செய்துள்ளது. ஆனால்
அந்தோ எத்தனைபேர் உயிரெனவொருபொருளே
யில்லையென்கிறார்! உடல், பொறி, கரணம், உயிர்ப்பு,
பிரமம் முதலியவற்றையே தனித்தனி உயிரென மயங்கிக்
கொண்டு தற்கொலை செய்துகொள்கிறாரவர். தன் உண்மையை
மறுப்பவன் பிறர் செய்யும் உபகாரத்தை நினைப்பனா?
அப்பிணம் அச்சிவசத்திகளையும் மறுப்பதியல்பே.
பேரின்ப நுகர்ச்சிக்குச் சேயனாகிறா னவன்.
அவனுக்கு ஐயோ! கவியிற் 'கண் ஏது?' என்றதிலுள்ள
'கண்' என்பது உயிர்.
இருளாம் வெளி ஏது? இரவு ஏது?:- உயிருக்கு
அவத்தைகள் மூன்று. அவை கேவலம், சகலம், சுத்தம்
என்பன. உயிர் ஆணவ மலத்தோடு மாத்திரையே கூடி
நிற்பது அதற்குக் கேவலம். அவ்வுயிர்
உடலினையெடுத்துக், கலையாதி போககாண்டத்தைக் கொண்டு,
புத்தியாதி போக்கிய காண்டத்திற்பட்டு, இச்சை அறிவு
செயல்கள் சிறிதே விளங்கப் பெற்றுச் சத்தாதி
விடயங்களைப் புரிந்து போகத்தை நுகர்ந்து
பிறப்பிறப்புக்களிலுழன்று, புவனந்தோறும் புடை
பெயர்ந்து திரிவது அதற்குச் சகலம். அச்சகலம்
நீங்கி உயிர் திருவருளைக் கூடும். அது
அவ்வுயிர்க்குச் சுத்தம். கேவலம் இரவு போல்வது.
அதனை நோக்கச் சகலம் பகலாகும். ஆயினும் சுத்தத்தை
நோக்க அ·து இரவை (இருளை) யே நிகர்க்கும். ஆகலின்
அது கவியில் 'இருளாம் வெளி' யெனப்பட்டது. இருளாம்
வெளி யென்றதால் ஒளியாம் வெளியுண்மை
கருதிக்கொள்ளப்படும். அதுவே சுத்தம்.
வையமெலாம் அறிய:- ஐக்கியவாத சைவர் (இலிங்கங்க்
கட்டிகள்) ஆணவ மல முண்டெனக் கொள்ளார். ஆகலின்
கேவலாவத்தை அவரால் மறுக்கப்படும். அவரோ
டினப்பட்டவர் மாயாவாதியர். அவர் உயிரின் சகலத்தை
மித்தை யென்பர். அங்ஙனம் கேவல சகலங்களாகிய
பந்தத்தை யுடன்படாத அவ்விருவகையினரும் சுத்தத்தைப்
பெறுதல் யாங்ஙனம்? 'நோய் நாடி நோய் முதனாடி
யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற
குறளை அவ ரறிக. தம் மதங்களிலும் முத்தி யுண்டென
அவர் கூறுவது ஆரவாரமே. கட்டியது, கட்டப்பட்டது,
விடுவிப்பது ஆகிய மூன்றில் ஒன்றன் உண்மையையில்லை
யென்பவனும் மெய்யான விடுதியை யாண்டும் பெறான்.
விடுதி - முத்தி. அவனுக்கு அப்பேற்றின்கண்
மனவெழுச்சி செல்லாது. கேவல சகலங்களிலும்
உயிருக்குச் சிவசத்தி உபகரித்துக்கொண்டிருக்கும்.
அவ்வுபகாரம் சூக்கும வைந் தொழிலும், தூல
வைந்தொழிலுமாம். அவ்வவத்தைகளை மறுப்பது
அவ்வுபகாரத்தையே மறுப்பதாகும். அம்முகத்தால்
அம்மதத்தவர்க்கு உயிரு மின்றாம், சிவசத்திகளும்
புறகாம்.
அந்நாத்திக ரெல்லாந் தவஞ் செய்க. அதன்
பயனாய்ச் சித்தாந்த சைவ சாத்திரங்களைக்
குருமுகத்தால் ஆராயு முரிமை அவர்க்குக் கிட்டும்.
அப்போது அம்மறுப்புப் பொருள்களெல்லாம்
உடன்பாட்டுப் பொருள்கெளென அவரால் தெளியப்படும்.
அவ்வுண்மை உலகின்மேல் ஆணையிட்டுக் கூறப்படுகிறது.
'வைய மெலாம் (அறிய)' என்றது கவி.
'நீ யறிய' என்றது சிவத்தின்மேல் ஆணை யென்றபடி.
ஏது என்னும் வினா இல்லை யென்னும் பொருளுடையது.
--------------
மூன்றாம் பாட்டு
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந் தாக்கா வுணர்வரிய தன்மையனை - நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிர்¢யாமை தானே குறிக்குமரு ணல்கக் கொடி.
பதவுரை
எக்காலும் - எந்தக் காலத்திலும்
வாக்காலும் - வாக்கினாலும்
மிக்க - பொல்லாத
மனத்தாலும் - மனத்தினாலும்
தாக்கா - எட்டப்படாததும்
உணர்வு அரிய - ஆன்ம அறிவால் அறிந்துகொள்ளுதற்கு
முடியாததும்
தன்மையனை - (ஆகிய) தன்மைகளையுடைய சிவத்தினது
(நிலையை)
பிரித்து - வேறாக எடுத்து
நோக்கி - ஆராய்ந்து பார்த்து (அது)
அறிவு தம்மில் - அறிவாகாரமான ஆன்மாக்களோடு
பிரியாமைதானே - பிரியாமற் கலந்து ஒன்றாயிருக்கும்
உண்மை
குறிக்கும் - (உலகத்தார்) தெரிந்துகொள்ளும்படி
(யைத்தானே)
அருள் நல்க - (கடவுள்) அருள் சுரக்கும் பொருட்டு
கொடி - துவசங் (கட்டப்பட்டது).
கருத்து
எக்காலத்திலும் சிவம் வாக்குக்கும்
மனத்துக்கும் ஆன்ம அறிவுக்கும் எட்டாதது.
அப்பொருளைத் தனித்தெடுத்து ஆராயின் அது
ஆன்மாக்களின் அறிவோடு பிரியாமற் கலந்து
ஒன்றாயிருப்பது அறியப்படும். அதை உலகத்தார்
தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காக அச் சிவமே அருள்
சுரக்குமாறு கொடி கட்டப்பட்டது.
விளக்கம்
வாக்காலும் மிக்க மனத்தாலும் தாக்கா:- ஞானம்
மூன்று வகை. ஒன்று பாசஞானம். அது வாக்கெனவும்
படும். இன்னொன்று பசுஞானம். அது மனமெனவும்
படும். பின்னொன்று பதிஞானம். அது திருவடி
ஞானமெனவும் படும். 3நான்கு வாக்குக்களும்
சொற்பிரபஞ்சம். பிருதிவிமுதல் நாத மீறாய
முப்பத்தாறு தத்துவங்களும் பொருட்பிரபஞ்சம்.
அவ்விரண்டையும் பற்றி நிகழும் உயிரின் ஏகதேச ஞானமே
பாசஞானம். பாசம் வாயிலாக நிகழும் பசுஞானமே அது.
பளிங்கென்பது ஒரு பொருள். அதற்குச் சொந்த வியல்பு
உண்டு. ஆனால் அப்பளிங்கோடு சிவப்புப் பொரு ளொன்று
சேர்க்கப்படுகிறது. அப்போது அப்படிகத்தி னொளி
தனித்தறியப்படாது. அப்படிகம் அச்செந் நிறத்தையே
தன்னிறம் போற் காட்டும். அதன் சொந்த நிறம்
அதற்குத் தன்னியல்பு. தன்னியல்பு -
சிறப்பியல்பு. அதனைச் சார்ந்து அதனுடையதுபோல்
தோன்றும் வேற்றுப் பொருளின் நிறம் அதற்குப் பொது
வியல்பு. பளிங்கு (படிகம்) போல்வது உயிர்.
அவ்வேற்று நிறப் பொருள் போல்வன அப்பாச வகைகள்.
வேற்றுநிறப் பொருளின் 4 கூட்டரவாற் படிகத்தின்
தன்னியல்பு விளங்காது. அதுபோல உயிருக்கும் பாசக்
5 கூட்டரவால் தன்னியல்பு விளங்காமற் போம்.
அப்போது உயிரின்பாலுள்ளது சுட்டறிவு.
உயிர் பாசங்களிலிருந்து நீங்கும்.
அப்பாசங்கள் அவ்வுயிருக்கு வியாப்பியம். அதனை
அவ்வுயி ருணரும். அதனால் அவ்வுயிர்க்கு ஒருவகை
மேம்பா டுண்டு. அது சடுதிச்செருக்கு.
அச்செருக்கு ஒருவகை மேம்பா டுண்டு. அது
சடுதிச்செருக்கு. அச்செருக்கு மலவாதனை பற்றி
வருவது. அதனால் அவ்வுயிர் தன்னையே மதித்து அநாதி
முத்த சிவம்போல் 'நானுமொரு பிரம மாவேன்' என்று
சமவாத ஞானம் பேசும். அதுதான் பசுஞானம். நான்
பிரம மென்னும் மாயாவாத ஞானம் பாசங்கள் நீங்கலே
முத்தி யென்னும் பாடாணவாத ஞானம். கருவிகளிற்
பரந்துசென்ற உயிரறிவு அவை பிரிந்தவழி
அவ்வுயிர்மாட்டு வந்து ஒன்றி நிற்றலே முத்தி
யென்னும் பேதவாத ஞானம் ஆகிய இவையும் பசுஞானங்களே
யாம். பசுஞானம் ஐயப்பட்ட அறிவு. அதுவும், பாசஞான
மாகிய சுட்டறிவும் உயிர்க்குச் சிவத்தைக் காட்டா
அதனையே 'வாக்காலு மிக்க மனத்தாலும் தாக்கா' என்றது
கவி.
உணர்வு அரிய தன்மையன்:- உயிர் பாசத்தோடு
கூடிப் பசுவாயிற்று. அப்போது அதனியல்பு பசுத்துவ
மெனப்படும். அந்நிலையில் உயிர் ஏகதேசஞான
முடையது. பசுத்துவம் நீங்குஞ் சமயம் வரும்.
அப்போது அவ்வுயிர் வியாபகமாம். அதன்பா
லிருப்பதும் சுட்டிறந்த அறிவு. அவ்வறிவுக்குப்
பதிப்பொருள் கோசரமா மென்பர் சிலர். அப்படி
யன்று. சிவஞானத்தாலேயே சிவத்தைக்காண வேண்டும்.
அங்ஙனம் காணு முயிர் சிவத்தில் வியாப்பியமா யடங்கி
அச்சிவஞானத்தாலேயே தன்னையுங் காணும்.
அங்ஙனமின்றித் தன்னறிவு கொண்டு அவ்வுயிரால் எந்த
நிலையிலும் சிவத்தை யறியமுடியாது. 'உணர்வரிய
தன்மையன்' என்ற அடிக்குப் பொருள் அது.
அறிவுதம்மிற் பிரியாமை தானே குறிக்கும்
அருள்:- அதனால், உயிருக்கு அயல்போலுஞ் சிவம்
என்னலாமா? அதுவுமில்லை. உயிர் வேறு. உடல் வேறு.
ஆயினும் உயிர் உடலிற் கலந்து உடலேயா யிருக்கிறது.
கண்ணுக்குங் கதிரவனுக்கும் ஒளியுண்டு. ஆனாற் கண்
காணும், கதிரவன் காட்டுவான். அவ்வொளிகள் பெயரால்
ஒன்று. இயல்பால் வேறு. கண்ணொளி காண்பதற்கு
உயிரறிவு உடங்கியைய வேண்டும். அப்படியே சிவம்
கலப்பால் உயிரேயாம்; பொருட்டன்மையால் உயிரின்
வேறாம்; உயிருக்குயிராதற் றன்மையால் உயிரோ டுடனாம்
அச்சம்பந்த விசேடமே அத்துவிதம். ஆகவே சிவம்
உயிருக்கு அயலா யில்லை யென்க.
இனித், திருவடி ஞான மாவ தென்னை? அது ஏழு
விதம். ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல்,
சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன அவை.
முதல் ஐந்தற்கும் நூல் வேண்டும். அவை ஞானவேள்வி
யெனப்படும். பின் இரண்டற்கும் நூல்வேண்டாம்.
ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல் என்னும் மூன்றாலும்
உண்மைஞானம் நிகழாது. அவற்றைப் பொருந்திய உயிர்
பதமுத்திகளைப் பெற்று ஆண்டு வைகி மீண்டுவந்து
கேட்டலாதிகளாலேயே பரமுத்தியை யடையும் கேட்டல்,
சிந்தித்தல், தெளிதல் நிட்டை கூடல்களே
உண்மைஞானம். கேட்டலாவது தேசிகனுபதேசத்தாற்
சிவத்தை உயிர் செவிமடுத் தறிதல். அதனாற் பதி பசு
பாசங்களி னியல்புகள் அவ்வுயிர்க்குத் தனித்தனி
தோன்றும். அது பேதத் தோற்றம். சிந்தித்தலாவது
அவ்வுபதேசத்துக் கனுகூலமான அளவைகளால் சிவத்தை
உயிர் கருதியறிதல். அதனால்பதிபசுக்களின்
கலப்புநிலை அவ்வுயிர்க்குத் தோன்றும். அது அபேதத்
தோற்றம். தெளிதலாவது சிந்திக்கப்பட்ட சிவத்தை
உயிர் தன்னறிவிற் சிவஞானத்தால் விளங்க அறிதல்.
அதனாற் பதியின் பற்றற்ற நிலை அவ்வுயிர்க்குத்
தனித்துத் தோன்றும். நிட்டைகூடலாவது அத்தெளிவால்
உயிர் பாச நீங்கிச் சிவானந்தானுபூதியில்
திளைத்தல். அதனால் அவ்வுயிர் தன் வியாபக அறிவு
விளங்கப் பெற்றுப் பதியோ டொத்து நிற்கும்.
அந்நிலையைப் பதிஞான மொன்றே தரவல்லது. அதனை 'அறிவு
தம்மில் பிரியாமைதானே குறிக்கும் அருள்' என்றது
கவி.
--------------
நான்காம் பாட்டு
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து - நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங் கூசாமற் காட்டாக் கொடி.
பதவுரை
அஞ்சு எழுத்தும் - சி - வ - ய - ந - ம என்னும்
ஐந்து எழுத்துக்களையும்.
எட்டு எழுத்தும் - ஓம் - ஹாம் - ஹெளம் - சி - வ -
ய - ந - ம என்னும் எட்டு எழுத்துக்களையும்
ஆறு எழுத்தும் - ஓம் - ந- ம - சி - வ - ய என்னும்
ஆறு எழுத்துக்களையும்
நால் எழுத்தும் - ஓம் - சி - வ - ய என்னும் நாலு
எழுத்துக்களையும்
பிஞ்சு எழுத்தும் - 'வ' என்னும் பிஞ்செழுத்தையும்
மேலை - மேலான
பெரு எழுத்தும் - 'சி' என்னும் பெருவெழுத்தையும்
நெஞ்சு அழுத்தி - மனத்தில் தியானித்து அத்தியான
முதிர்ச்சியால்
பேசும் எழுத்துடனே - 'வ' என்னும் பேசும் எழுத்துத்
தன்னை யறிவிப்பதோடு
பேசா எழுத்தினையும் - 'சி' என்னும் பேசா
எழுத்தினையும்
கூசாமல் - மிகவும் இலகுவாக
காட்ட - பதிவிக்கவுஞ் செய்யும்படி
கொடி - துவசங் (கட்டப்பட்டது).
கருத்து
அஞ்செழுத்து, எட்டெழுத்து, ஆறெழுத்து,
நாலெழுத்து, பிஞ்செழுத்து, பெருவெழுத்து,
ஆகியவற்றை மனதில் தியானித்து, அதன் முதிர்ச்சியால்
பேசும் எழுத்துத் தன்னை யறிவிப்பதோடு பேசா
வெழுத்தையும் சுலபமாக விளக்கஞ் செய்யும்படி கொடி
கட்டப்பட்டது.
விளக்கம்
முப்பத்தாறு தத்துவங்களும் பாசக்கூட்டம்.
ஆசானுபதேசத்தால் உயிர் அதைவிட்டு விலகும்.
அப்போது அவ்வுயிரின் தன்னியல்பு விளங்கும். அதிற்
சிவஞானம் பிரகாசிக்கும். அந்த ஞானத்தைக் கண்ணாகக்
கொண்டு அதற்கு மூலமாகிய சிவத்தை அவ்வுயிர் பாசம்
நீங்கிய தன்னறிவிற் காணும். ஆயினும் பாசத்தோடு
பல்காற் பயின்ற வாசனை அப்போதும் அவ்வுயிரை வந்து
தாக்கலாம். அதனையும் விட்டு அவ்வுயிர்
விலகவேண்டும். அதற்கு உதவுவதே பஞ்சாக்கர தியானம்.
பஞ்சாக்கரத்திற் பாசம் நீங்கிப் பதியைக்
காண்டலென்ற பொருள் அடங்கி யிருக்கிறது. ஆகலின்
அந்நிலையில் நிற்குமுயிர் அதனை ஓதவேண்டு மென்பது
அவ்வுயிர்க்கு ஆசான் தந்த பணி யென்க. (பணி- விதி)
தியானம் மூவகை 6 உரை, 7 மந்தம், 8 மானதம்
என்பன அவை. உரை, வாசகம், பாஷ்யம் என்பன ஒரு
பொருட் சொற்கள். மந்தமும் உபாம்சும் ஒரு பொருட்
சொற்கள். இங்கே கொள்ளப்பட்டது சுத்தமானதம்.
அ·தாவது அறிவாற் கணித்த லென்பது. இது அம் மூவகைத்
தியானத்திற்கும் அப்பாற்பட்டது.
பஞ்சாக்கரத்தை நிற்கு முறையில் நின்று ஓது
முறையில் ஓதவேண்டும். நிற்குமுறையும் ஓதுமுறையும்
வேறாயிற் பயனில்லை. சிவமும் உயிரும் பொருளால்
வேறு; ஆயினும் கலப்பால் ஒன்றே. ஞாயிற்றி னொளி
வியாபகம். கண்ணொளி அதற் கடங்கிய வியாப்பியம்.
இரண்டொளிகளும் ஒன்றுதல் வேண்டும். அப்போது கண்
தனக்குரிய பயனைப் பெறும். பயனாவது கண்ணைப்
பீடித்திருந்த இருளின் நீக்கம். அப்படியே சிவம்
வியாபகம். உயிர் வியாப்பியம். உயிர் அச்சிவ
வியாபகத்து ளடங்கி அச் சிவத்தின் வழித்தாய் நிற்க
வேண்டும். அதுவே உயிர் சிவத்துக்கு ஆற்றுங்
தொண்டு. நிற்குமுறை யென்பது அதுவே. அதனோடு கூடிய
ஓதுமுறையாவது யாது? ஓதல், கணித்தல், உச்சரித்தல்,
தியானித்தல் என்பன ஒன்று. தியானித்தற் கண்
மந்திரங் கிரியை பாவனை வேண்டும். அவை யொழிந்த
தியானம் சிறந்ததன்று. அவை நிகழ வேண்டு மிடம்
அகம். ஆண்டு இதயம் பூசைத்தானம். அதிற்
பஞ்சாக்கரத்தாற் சிவத்துக்குத் திருமேனி
யமைத்துக், கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறுமை,
இரக்கம், அறிவு, செபம், தவம், அன்பு என்னும்
எட்டுப் பூக்களைக் கொண்டு ப்ஞ்சாக்கரத்தாற் பூசை
செய்ய வேண்டும். நகாரம் திருவடி. மகாரம்
திருவுந்தி. சிகாரம் திருத்தோள். வகாரம்
திருமுகம். யகாரம் திருமுடி. இது தூல
பஞ்சாக்கரத் திருமேனி. சூக்கும பஞ்சாக்கரத்
திருமேனியாவது துடிக்கரத்திற் சிகாரமும், வீசிய
கையில் வகாரம். அபயகரத்தில் யகாரமும்,
அக்கினிக்கையில் நகாரமும், ஊன்றிய பாதத்தில்
மகாரமுமாயிருப்பது. நாபி ஓமத்தானம். அதில் ஞான
அனலை யெழுப்பிப் பஞ்சாக்கரத்தால் ஓமஞ் செய்ய
வேண்டும். புருவநடு தியானத்தானம். அதிற் சிகார
யகார வகாரமுறை கொண்டு பஞ்சாக்கரத்தாற் சிவோகம்
பாவனை செய்ய வேண்டும். சிகாரம் தத் பதம். யகாரம்
த்வம்பதம். வகாரம் அஸிபதம். தத் - அது. த்வம் -
நீ. அஸி - ஆகின்றாய். நிற்குமுறை யென்று முன்
சொல்லப்பட்டது இப் பாவனைதான். முன் சொல்லப்பட்ட
கலப்புந் தொண்டு மாகியவற்றை வாயிலாகக் கொண்டு
சிவம் உயிரினிடம் அத்துவிதமாய் நின்று விளங்கித்
தோன்றி மலத்தைக் கெடுக்கும். கவியில்
'நெஞ்சழுத்தி' யென்ற தொடரில் அவை யெல்லா முள.
அத்தகைய பேருபகாரத்தைச் செய்யவல்லது
பஞ்சாக்கரம். அதுவே மந்திர ராஜம். அது பல
பேதங்களை யுடையது. அஞ்செழுத்து, எட்டெழுத்து
முதலியன அவை. அஞ்செழுத்து சி வ ய ந ம. எட்டெழுத்து
ஓம் ஹாம் ஹெளம் சி வ ய ந ம. ஆறெழுத்து ஓம் ந
ம சி வ ய. நாலெழுத்து ஓம் சி வ ய.
பிஞ்செழுத்து , பெருவெழுத்து என்பவெல்லாம் மந்திர
சாத்திர பரிபாஷைகள். ஓங்காரமும் பஞ்சாக்கர
மெனப்படும். 'திருவருட் பய'னில் ஐந்தெசுத் தருணிலை
கூறவந்த சுவாமிகள் 'இறைசத்தி பாச மெழின்மாயை யாவி
யுறநிற்கு மோங்காரத் துள்' என்றருளினார்கள்.
அப்பேதங்களைத் தனித்தனி யறிய விரும்புவார் பலர்.
நல்லாசிரியன்பால் உபதேச முகத்தால் அவை விளங்கிக்
கோடற்பாலன. ஆயினும் அஞ்செழுத்தளவில் இங்குச்
சிறிது சொல்லப்படும். சிகாரத்திற் சிவமும்,
வகாரத்தி லருளும், யகாரத்திலுயிரும், நகாரத்திற்
றிரோதான சத்தியும், மகாரத்தின் மலமும் உள்ளன.
நகார மகாரங்களை முதலில் வைத்து உச்சரித்தல் பிறப்
பிறப்பிற் படுத்தும். சிகார வகாரங்களையே முதலில்
வைத் துச்சரிக்க. வீடு பேற்றைத் தருதற்குக் காரணமா
யிருப்பது அதுவே. சூக்கும பஞ்சக்கரம் அது தான்.
அருள் தன்னை யடுத்து நிற்கும் உயிரைச் சிவத்தோடு
சேர்க்கும். அது காரண பஞ்சாக்கர மாகிய சிகார யகார
வகார முறை அதில் மலவெழுத்துக்கள் விடப்படும்.
உச்சரிப்பு முறையில் பஞ்சாக்கரம் தூல சூக்கும
காரணமெனப் பலவாம். அவற்றின் நுணுக்கங்களை ஆசானருள்
கொண்டு பெரு நூல்களுட் கண்டு நலனெய்துக.
முற்றிற்று
ஸ்ரீமத் உமாபதி சிவந் திருவடி வாழ்க.
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
--------------------------------------------------------------------------------
1. "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
என்னும் திருக்குறளில் பொருள் உற்றறியத்தக்கது.
2. தாதான்மிய சத்தி :- எப்பொழுதும் விட்டு
நீங்காமல் நிற்குஞ் சத்தி - (தாதான்மியம் - அது
தானாதல்). முதல்வனின் ஆணையாகிய் சிற்சத்தி
முதல்வனின் வேறின்றி அவனின் வியாப்பியமாய் நிற்றல்),
முதல்வன் தனது சிற்சத்தியோடு பேதமும் அபேதமுமின்றி
அவ்விரண்டற்கும் பொதுமையாய் நிற்பன்,
தன்னெல்லையளவும் வியாப்பியாய் நிற்கும் ஞாயிறு தன்
கிரணத்தோடு அவ்வாறு நிற்றல் போலும். [சிவஞானபாடியம்
- பக்கம் 256]
3. வாக்குகள் நான்கு. சூக்குமை - பைசந்தி -
மத்திமை - வைகரி
4,5 - கூட்டரவு - கூட்டம் (அரவு - தொழிற்பெயர்
விருதி)
தொழிற்பெயர் விகுதிகள்:-
"தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி,
வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆல், இல்
என்பனவும் பிறவுமாம் (நன்னூல் - இலக்கணம்)
9உ-ம்) தேற்றரவு (தேற்றுதல்)
6 அருகிலிருக்கும் பிறர்செவிக்குங் கேட்கும்படி
செபித்தல்
7 மந்தம் or உபாம்சு = தன் செவிக்கு மாத்திரம்
கேட்கும்படி நாநுனி உதட்டைத் தீண்ட மெள்ளச்
செபித்தல்
8 மானதம் - நாநுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை
பொருந்தி மனசினாலே செபித்தல்.
for more details
|