Home            On DK Movement, Atheism        Meaning of Viboothi or Thiruneeru

The Certainness of the Only God Shiva

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
ESWARAMOORTHY PILLAI
Quick Navigation to more Saivism Links :
--------------------------------------------------------------------------------
முன்னுரை
 

    சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள.  அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று.  நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.  சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன.  அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று.  அவ்வாசையாற் றோன்றியதே 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல்.  கூடியவரை இ·தொரு முழுநூலாயிருக்க வேண்டுமென்று நான் எண்ணியதால் என் 'விஷயம்' முதலியவற்றில் வெளியான கருத்துக்களும் இதில் வந்திருக்கும்.
    முதன் முதலில் நானியற்றிய செய்யுள்நூல் இதுவே.  சிவபரத்துவ வுண்மைகள் சைவமக்கட்கு மனப்பாடமாக வேண்டுமென்ற எண்ணமே நான் இச் 'நிச்சய'த்தைச் செய்யுள்நூலாக இயற்றக் காரணமாயிற்று.  வைதிக சைவோத்தமர்கள் இந்நூலிற் காணப்படுஞ்சொற்குற்றம் பொருட்குற்றங்களை க்ஷமித்து என்னை ஆதரிக்கும்படி நான் அவர்களைப் பிரார்த்திக்கிறேன்.  விநாயக வணக்கம் ஆசிரிய வணக்கம் உள்பட இந்நூற் செய்யுட்கள் இருநூற்றுப் பதினைந்து.
    நான் ஒரு தடவை மதுரைக்குப் போயிருந்த காலத்தில் எனக்குப் பாட்டனார் முறையிலுள்ள ஸ்ரீ மாந் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்களிடம் இந்நூலைச் சுமார் ஒருமாதகாலம் வாசித்துக்காட்டினேன்.  அப்போது அவர்கள் மிக விருத்தாப்பியரா யிருந்தார்கள்.  ஆயினும் அவர்கள் இதனைப் பொறுமையோடும் ஆசையோடும் செவிமடுத்துப் பரம சந்தோஷமடைந்து என்னைப் பார்த்துப், 'பேரப் பிள்ளை! உம்முடைய இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிகவும் நயமுடையனவா யிருக்கின்றன.  கருத்துக்களும் உயரியனவே.  ஆனால் இந்நூல் தழுவிச்செல்லும் பிரமாணங்களிற் பல வடமொழி வேதாதிகளிலுள்ளன வாகலின் அவை சம்பந்தமாக இதனை நான் மாத்திரம் ஆராய்ந்து அபிப்பிராயஞ் சொல்லுதல் போதாது.  இவ்வூரிலுள்ள சிவஸ்ரீ கலியாண சுந்தர பட்டரவர்களை நான் உமக்கு அறிமுகப்படுத்திவைப்பேன்.  அவர்களிடமும் நீர் இந்நூலை வாசித்துக்காட்டி அபிப்பிராயங்கேளும்' என்று கூறி எனக்கு அப்பட்டரவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.  சுமார் பதினைந்து நாட்கள் நான் அவர்கள் வீட்டுக்குப்போய் இந்நூல் முழுவதையும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சுமார் இரண்டுமணி நேரம்வரை சிலசில செய்யுட்கள் வீதம் வாசித்துக்காட்டி முடித்தேன்.  இந்த நூலில் அந்தப்பிரமாண வாக்கியங்களுக்கெல்லாம் செவ்வையாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறதென்று அவர்களுஞ் சம்மதித்தார்கள்.  அப்பால் அவ்விரு பெரியார்களிடத்திலும் அபிப்பிராயங்களை எழுத்துமூலம் தரும்படி நான் வேண்டினேன், அவர்களுந் தந்தார்கள்.  அவை இதிற் சேர்க்கப்பட்டுள்ளன.
    அப்பால் என் வீட்டிற்கு அவ்வப்போது வந்த சைவ சித்தாந்த அறிஞர் சிலரிடம் பொழுது போக்காக நான் இந்நூலைக் காட்டினேன்.  அவர்கள் நூல் முழுவதையும் படித்துப் பார்க்க அவகாசமில்லாதவராய்ப் பார்த்தவரையும் மெச்சி இதனைச் சீக்கிரம் அச்சிடும்படி என்னைத் தூண்டிச் சென்றார்கள்.  அப்பெரியார்களுள் ஒருவரும் சைவசமயத்தில் ஆர்வமிக்கவரும் காழிக்கல்விக் கழகத்து உறுப்பினரும், காழி வித்வான் சைவத்திருவாளர் ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களின் மாணவரும், எனக்கு வெகுபிரியரும் ஆகிய ஸ்ரீமாந்-காழி.பி.அகோரம் பிள்ளையவர்கள் இந்நூலை முழுவதும் படித்து உத்ஸாக மேலிட்டவராய்த் தாமே அரும்பதவுரை யெழுதிப் பிரமாணங்களையுஞ் சேர்த்துச் சிவகிருபையால் அச்சிட்டுப் பூர்த்தி செய்தார்கள்.  இப்பெரிய சிவபணியைச் செய்த அவர்களுக்கு என் வந்தனம் உரியதாவதுடன், அவர்களுக்குச் சகலவித நன்மைகளையுந் தந்து இத்தகைய சிவபணிகளில் அவர்களுடைய மனம் இடையீடின்றிச் செல்லத் திருவருள் சுரக்குமாறு ஸ்ரீ பார்வதி பதியாகிய ஸ்ரீ பரமசிவனாரின் உபய சரணாரவிந்தங்களையும் நான் பணிகிறேன்.
    செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர் வித்வான் பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமையா அவர்கள் B.A.,B.O.L., இந்நூலை வெளியிடுதற்கண் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார்கள்.  இவ்வேலையைத் தம் சொந்த வேலைகளில் ஒன்றாகக்கொண்டு அச்சுப்பிழை சரிபார்த்தல் முதலியவற்றையெல்லாம் அவர்களே செய்து உபகரித்தார்கள்.  அவர்களுக்கு என் வந்தனம் உரியது.
1-12-1939                     ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
                                நூலாசிரியன்

--------------------------------------------------------------------------------
பதிப்புரை
    சைவ சமயத்தில் முழுமுதற் கடவுளுக்குச் சிவன் சங்கரன் சம்பு ஈசுரன் உருத்திரன் ஈசன் அரன் முதலியனவே சிறந்த பெயர்கள்; உமாசகாயம் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவே சிறந்த அடையாளங்கள்; சர்வஞ்ஞ்தை திருப்தி அநாதிபோதம் முதலியனவே சிறந்த குணங்கள்.  அந்நாமங்களிலும் அவ்வடையாளங்களிலும் அக்குணங்களிலும் அசூயை கொள்பவன் வைதிக சைவ சமயத்தவனாக மாட்டான்.  ஒருசைவனும் வைஷ்ணவ கிறிஸ்தவ இசுலாமிய மாதியவற்றுள் ஏதாவதொரு சமயத்தைச் சேர்ந்தவனும் கலந்து சம்பாஷிக்கத் தொடங்குங்கால் கடவுளைப்பற்றிய பிரஸ்தாபங்கள் வருமேல் அவ்விருவரும் தத்தம் மதங்களிற் கடவுளுக்கு வழங்கப்படுஞ் சிறப்புப் பெயரை வழங்காமல் கடவுள் ஆண்டவன் கருத்தன் முதலிய பொதுப்பெயர்களை வழங்கலாம்.  ஆனால் இரண்டு சைவர் தம்முட் கலந்து பேசுங்கால் தெய்வப் பிரஸ்தாபம் வருமிடங்களிலெல்லாம் தம் சமயத்திற் கடவுளுக்குச் சிறப்பாக வழங்கப்படுஞ் சிவாதி நாமங்களையே வழங்கவேண்டும்.  ஈசுர நாமங் கொண்டே முன்னுள்ள நாத்திகரும் இந்நாட்டில் விவகரித்து வந்துளார்.  இப்போதும் அந்நாமப் பிரஸ்தாபம் எங்குமுண்டு.  சைவம் அப்போது எவ்வளவு வியாபகமுடையதாயிருந்தது, இப்போதும் எவ்வளவு வியாபகமுடையதாயிருக்கிறது என்பதை அவ்வீசுரநாம வியாபகமொன்றாலேயே யறியலாம்.
    'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல் அத்தகைய சிவபரம்பொருளின் பிரபாவங்களைச் சவிஸ்தாரமாய் எடுத்துவிளக்குவது.  எனக்குச் சிறந்த நேசராகிய திருநெல்வேலிப்பேட்டை ஸ்ரீமாந். ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலையாக்கிப் பலரிடமுங்காட்டியது போல் என்னிடமுங் காட்டினார்கள்.  நான் இதனைப் படித்தறிந்ததும் அவர்களுக்குள்ள சைவசாத்திர ஆராய்ச்சியையும் சைவசமயப்பற்றையும் என்னால் அளவிட முடியவில்லை.  இதையச்சிட்டுக் கொடுக்க யாரையாவது தேடியதுண்டாவென்று நான் அவர்களைக் கேட்டேன்.  சைவாபிமானமுள்ள தனவந்தர் யாரையுந் தமக்குத் தெரியாதென்று அவர்கள் சொன்னார்கள்.  நானே உரையெழுதிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிடுகிறேன்.  என்னிடங் கொடுங்கள் என்றேன் நான்.  அவர்களும் கொடுத்து விட்டார்கள்.  நான் அரும்பதவுரை யியற்றிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிட்டுப் பூர்த்தி செய்தேன்.  இவ்வுரை முதலியவற்றுட் பிழைகளுளவேல் இந்நூலாசிரியரவர்களும் மற்றை அறிஞர்களும் பொறுத்தருள்க.
    ஒவ்வொரு செய்யுட்குங் கிடைத்த பிரமாணங்கள் அச்செய்யுளடியில் வருகின்றன.  அவை அச்செய்யுளிலுள்ள பல பகுதிகளுக்கும் பிரமாணங்களாக விருக்கும்.  ஒவ்வொரு பகுதிக்குமுரிய பிரமாணங்களை அவற்றிலிருந்து பிரித்தெடுத்துக்கொள்ளும்படி வாசகர்களை நான் வேண்டுகிறேன்.  பூர்வபட்சத்துக்குரிய பிரமாணங்களும் அங்குண்டு.  வேண்டாதனபோலிருக்கும் பிரமாணங்களை ஒதுக்கிவிடலாம்.
    இந்நூல் இவ்வழகான புத்தகவடிவில் மிகச்சுருங்கிய காலத்தில் அச்சாகிவருதற்குத் துணை புரிந்தவர்கள் என்னுடைய மாணாக்கரும் முன்னுரையிற் கண்டவருமாகிய பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமய்யா அவர்கள் B.A.,B.O.L., ஆவார்கள்.  அவர்கள் செய்த அந்நன்றி மறக்கற்பாலதன்று.
6-1-1940                                        காழி.P.அகோரம் பிள்ளை
                                                பதிப்பாசிரியன்.

--------------------------------------------------------------------------------
அபிபிராயங்கள்
வேத சிவாகமாதி சகல சாஸ்திர பண்டிதோத்தமராகிய
மதுரை
சிவஸ்ரீ.ம.கல்யாணசுந்தர பட்டரவர்கள்
தந்தது
ஆசிரியப்பா
தென்றமிழ் நாடு செய்தவப் பயனென
வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்
பேட்டை யென்னும் பெருநக ரதனுள்
தாவில் பரம்பரைச் சைவ வேளாண்
மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்
ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்
செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்
எவரும் பொருளை யெளிதிற் கண்டு
மகிழத் தக்க வகையில் விளங்கி
யருமறை யாகம புராண மாதி
சாத்திர மனைத்தொடுஞ் சமஞ்சஸ மாகி
வியனறி வுடையோர் வியக்க வுளதே.
13-6-1937

--------------------------------------------------------------------------------
திருக்குறள் தெளிபொருள் வசனம், பரங்கிரிப் பிரபந்தத்திரட்டு முதலிய பலநூல்களுகாசிரியரும் மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவானும்
ஆகிய
சைவத்திருவாளர்
மு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்
தந்தது
    இந்நூலாசிரியர் தமிழ் வித்துவான் ஸ்ரீ த.ஆறுமுக நயினார் பிள்ளையவர்களுக்குச் சீமந்த புத்திரராய்ப் பிறந்து சிறுவயதிலே ஆங்கிலமுந் தமிழுங் கற்று......... உபாத்தியாயரா யிருக்கின்றனர்.   அப்படியிருக்கும்போது தமிழ்க் கல்வியை.........நிரம்பக் கற்கவேண்டுமென்று நினைத்துக் கலியுக வரதராகிய முருகக்கடவுள் திருவருளால் நூலாராய்ச்சி செய்தனர்.  (அதனால்) பரத்துவ நிச்சயம் பிறப்பிறப்பில்லாத பரம்பொருளாகிய சிவனொருவர்க்கே கூறவேண்டு மென்று தெரிந்தனர்........மேற்கூறிய உண்மையைத் தெளிந்து 'தாமின்புறுவ துலகின் புறக்கண்டு' என்னுஞ் சுருதிக் கிணங்க இலை மறை காய் போற் கிடந்த விஷயங்களை யெல்லாம் வெள்ளிடை மலைபோல் விளங்குமாறு தர்க்க சுத்தியாகச் 'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்' என்ற அழகுடனே இருநூற்றுப்பதினைந்து செய்யுளால் ஒரு சிறு நூல் செய்து.....மதுரைக்கு வந்து என்னிடம் ஒவ்வொரு பாடலையும் நேரிலே வாசித்துக் காட்டினர்.  பாடல்களைக் கேட்குந்தோறும்.......அதி மாதுரியமாக இருந்ததைக் கண்டு மிகுதியுஞ் சந்தோஷமுற்றேன்.  பற்பல சமயத்தாரும் இதற்கொரு மறுப்பெழுத வேண்டுமென்று துணிந்தால் அவருக்கு வேதாகமங்களிற் பிரமாணங் கிடைக்கமாட்டாது.............ஆதலால் அவர் கருத்து நிரம்பாததாய் முடியும்.  தமிழ்ச் செய்யுளில் பரத்துவ நிச்சயங் கூறும் இந்த நூல் போல ஒரு நூல் இருக்கிறதாக நான் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை.  பரத்துவ நிச்சயந் தெரியப்புகுவார் அரிய பெரிய நூல்களைப் படித்துப் பெருங்காலம் போக்காமல் இந்த சிறு நூலை ஒரு முறை படித்தாலே ஐயமறத் தெளிவாய் விளங்கும்.  தமிழுலகத்திற்கு இவ்வுதவி புரிந்த நூலாசிரியருக்கு நாமெல்லாம் என்றும் நன்றியறிதல் பாராட்டுங் கடப்பாடுடையோம்.
16-6-1937

--------------------------------------------------------------------------------
செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா
உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர்
வித்வான்
பிரம்மஸ்ரீ. K.M.வேங்கட ராமையா, B.A.,B.O.L. அவர்கள்
தந்தது
'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்' தான் தொழு மன்பர் கட் கெல்லாம் பெருவிருந்தளிக்கும் 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல்.
    'வாழ்த்த வாயும்நினைக்கம டநெஞ்சுந்
    தாழ்த்தச் சென்னியும் தந்தத லைவனைச்
    சூழ்த்த மாமலர் தூவித்து தியாதே' யிருக்கும் நம்மவர்களுக்கு இத்தகைய நூலொன்று இன்றியமையாததே யன்றோ?
    'விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
    நிச்சல் நீறணி வாரைநி னைப்பதே' யென்ற தேவாரத்தைக் கடைபிடித்தொழுகும் சைவ வள்ளலராகிய திருநெல்வேலிப்பேட்டை திருவாளர் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலை யாத்து உலகுக்கு உதவியுள்ளார்கள்.  இந்நூலுக்கு அரும்பதவுரையும், பிரமாண முதலியனவும் எனது ஆசிரியர் சிவஸ்ரீ காழி பி.அகோரம்பிள்ளையவர்கள் எழுதிக் கோத்து உதவிய செயல் சாலச் சிறந்த தொன்று.  - - - இந்நூற் பாடல்கள் செவிக்கின்பந் தருமாறும், கற்றோரும் மற்றோரும் அறியுமாறும், எளிய நடையில் இருந்தபோதிலும், விஷயப் பெருமைக்கு ஏற்றவாறு ஆங்காங்குக் கடினமாக விருக்கும் சொற் றொடர்களுக்குத் தெளிபொருளெழுதி யுபகரித்தல் கற்றறிந்தோர்தம் கடனே.  அன்றியும், இந்நூற் பொருட்குக் கொடுத்துள்ள பிரமாணங்கள் கற்றறிந்தோர்க்கும் ஓர் விருந்தாகும்.
    இந்நூலாச்சுவாகன மேறுங்கால் எழுத்தெழுத்தாக இந்நூலை வாசிக்கும் பேற்றை நான் பெறலானேன்.  அப்பொழுது யான் படித்தவற்றுள் என்னைக் கவர்ந்த - - - விஷயங்களுட் சில ஈண்டுக் குறிப்பிடத்தக்கன.  அவை 25, 59, 60, 63, 92, 98, 108, 124, 151, 169,170 ஆஞ் செய்யுள் முதலியவற்றின் கருத்துக்களென்க.
இவை நிற்க,
    'நெஞ்சம் உமக்கே யிட மாகவைத்தேன்
        நினையா தொரு போதும் இருந்தறியேன்'
    'சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
        தமிழோ டிசை பாடல் மறந்தறியேன்
    நலந் தீங் கிலும்உன்னை மறந்தறியேன்
        உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்'  ஆகிய இவை சூலை நோய் தீரப்பாடிய திருநாவுக் கரையாது திருப்பதிகத்திற் காணப்படுகின்றன.  இவற்றின் பொருள் தெளிவாக விளங்குகின்றிலது.  அதற்குக் காரணம் இப்பதிகம் சமண் சமயத்தினின்று சைவசமயம் புகுவதற்குக் காரணமாய சூலை வேதனையைத் தீர்க்க வேண்டுமென்று பாடிய திருப்பதிகத்தில் அமைந்திருத்தலே யாகும்.  சமண் சமயத்திருந்தபொழுது அப்பமூர்த்திகள் சிவ பரம்பொருளை நினைக்கவே யில்லையென்பது.  'அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை யாரம்பக் குண்டரோ டயர்ந்து நாளும், மறந்து மான் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன்' என்ற வடிகளால் தெள்ளிதின் விளங்கும்.  அவ்வாறாயின், வாகீசப் பெருமான் மேற்கூறிய வாக்கியங்களில் குறித்த வழிபாடு எப்பொழுது செய்யப்பட்ட தெனின், பலர் பலவாறு கூறுப.  ஒரு சாரார் முன் ஜன்மத்துள் என்ப.  மற்றொரு சாரார் அச் சமண் சமயத்திருந்த பொழுது செய்த வழிபாட்டைக் குறிக்கும் என்றும், 'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும்' 'யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவர்' என்ற இன்னோரன்ன பிரமாணங்களைக் காட்டி அவ்வழிபாடு முழுமுதல் தலைமையுடைய இறைவனையே சாருமென்றுங் கூறுவர்.  இதுவே எமக்கும் உடன்பாடு.  இந்நூல் 84 ஆவது செய்யுளைக் கண்டதும் யான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை; அணுவளவிருந்த சந்தேகமும் நீங்கிற்று.  ஆனால் இச் செய்யுட் பிரமாணத்தில் கண்ட ஸ்மிருதிவாக்கிய பாடம் யான் உபதேசிக்கப்பட்ட வாக்கியத்தினும் சிறிது வேறாகும்.  'சங்கரம் ப்ரதிகச்சதி' என்பது இந்நூலிற் கண்டது; 'கேசவம் ப்ரதிகச்சதி' என்பது எனக்கு உபதேசம்.  ஆயினும், மற்றைய ஆதாரங்களை நோக்குழி 'ஈச்வரம் ப்ரதிகச்சதி' என்பதே பொருத்தமான பாடமாகும் என்று கொள்ளற் பாற்று. இது நிற்க.
    ஞானிக்கு எம்மதமும் சம்மதமென்றல் சைவசமயக் கொள்கை யாகாது என்பது இந்நூல் 179 ஆவது செய்யுட் கருத்தாயினும், எம்மதமும் சம்மதமெனும் இக்காலத்து 168ஆவது செய்யுட் கருத்துச் சிறிது பொருத்தம் இன்றாகும்.  உபநிடதகாலம் வேறு; இக்காலம் அத்தகையதொரு அபிப்பிராயத்துக்கு இடந் தராதன்றோ?............
    இக்காலத்தில் நந்தம் செந்தமிழ் நாட்டினருட் சிலர் வடமொழிப் பயிற்சியை முற்றும் வெறுக்கின்றார்கள்.----- இந்நூல் 201 முதல் 206 ஆவது செய்யுள்வரை 'சைவனாவான் வடமொழியும் கற்றலவசியம்' என்ற விஷயத்தைப்பற்றி விரிவுற எழுதியுள்ளமையையும், வாழ்த்துச் செய்யுளையும் கண்டதும் என்மனம் வரம்பிகந்த மகிழ்வெய்திற்று.  'வாழ்த்துவார் வாயினுள்ளா'ரும், 'சிந்திப்பார் சிந்தையுள்ளாரு' மாகிய 'நீதியாற் றொழுவார்கள் தலைவனாம்', 'தாயினும் நல்ல சங்கரன்', 'ஆரியமும் தமிழும் ஆவர்' என்பது தேவராதிகளைப் படித்தவர் நன்கறிகுவர்.  'ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய், அண்ணாமலையுறை யெம் அண்ணல் கண்டாய்' என்றது காண்க.  'வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்' பெருமை யறிய இருமொழியும் அறிவது இன்றியமையாததென்று குறித்தமை இந்நூலாசிரியருடைய மனவிரிலின் தன்மையைத் தெற்றென விளக்குகின்றது.
    நாத்திகர்தாம் மிகுந்திடுமிக் கலிகாலத்தில், பணமே பத்துஞ் செய்யும் என்னும் இப்பாழ்காலத்தில், நாட்டை யாமே ஆளல் வேண்டும், யாமே ஆளல் வேண்டும், நாடுகள் யாவும் கொள்ளல் வேண்டும் என்ற அவாமிக்கு இரத்தம் சிந்தும் இக்காலத்தில் இத்தகைய நூலுக்கும் இடன் உண்டுகொல்?
ஆயினும், இந்நூல்
    'செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
    பத்திசெய் மனப் பாறைகட் கேறுமோ?'
    எனில் ஏறாது தான்.  ஆயினும் புறச்சமய நெறிநின்று அகச்சமயம் புக்கும் அம்முறையே மேற் சென்று சென்று சைவத் திறத்தடைந்து சிவனடிசோவல்ல நற்றவமுடையார் இதனைப் பெரிதும் போற்றவே செய்வரென்க.
1-1-1940

--------------------------------------------------------------------------------
 
 
--------------------------------------------------------------------------------

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
நூல்
    இந்நூல் இனிது முடிதற் பொருட்டுச் செய்யப்படும் விநாயக வணக்கம்.
    மன்னுசிவன் மெய்ப்புகழை வந்தமட்டில் யான்பாடற்
    கென்னுடைய பேராசை யீர்த்ததெனை - யன்னதனா
    லத்திமுக வுன்பதநா னஞ்சலித்துச் சில்பாடற்
    கொத்துதுரைப்பே னெற்கருணீ கூட்டு.
    (அரும் பதவுரை) மன்னு - நிலைபெற்ற; மெய்ப்புகழை - பொருள் நிறைந்த கீர்த்தியை; வந்தமட்டில் - பாடத்தெரிந்த வரையில்; ஈர்த்தது - இழுத்தது; அன்னதானால் - அதனால்; அத்திமுக - விநாயகரே! பதம் - திருவடிகளை; அஞ்சலித்து - வணங்கி; சில - சில; கொத்து - திரட்டு; உரைப்பேன்ன் - இயற்றுவேன்; எற்கு - எனக்கு; நீ எற்கு அருள் கூட்டு என்க.
******
    இந்நூலை யாக்கியோர் தமக்குச் சைவசித்தாந்தங் கற்பித்த ஆசிரியரை வணங்குதல்.
 விளங்கொளி வெள்ளி மலைமிசை யுமைதன்
        னிடமுற வீற்றிருந் துயிர்க்குக்
   களங்கம தொழித்துப் பரகதி யருளுங்
        கண்ணுதற் பரமனே பரமென்
   றுளங்கொள நாயேற் கொளிருநான் மறையி
        னுறுதியை யுணர்த்தி வாழ்வளித்த
   வளங்கொழு நெல்லைச் சிதம்பர ராம
        லிங்கரின் மலரடி சரணே.
    (அ-ரை) வெள்ளி மலைமிசை - கயிலையில்; இடம் உற - இடப்பாகத்திற் பொருந்தும்படி; வீற்றிருந்து - மகிழ்ந்திருந்து; களங்கமது - பாசக்குற்றங்களை; பரகதி - மேலான முத்தியை; கண்ணுதற் பரமனே - சிவபிரானே; பரம் - முழு முதற் கடவுள்; உளம் கொள - மனதிற் பதியும்படி; ஒளிரும் - பிரகாசிக்கிற; நால் மறை - இருக்கு ஈசுர் சாமம் அதர்வணம்; உறுதியை - சத்தியார்த்தத்தை; கெழு - நிறைந்த; நெல்லை - திருநெல்வேலி; சிதம்பரராமலிங்கர் - அவ்வாசிரியரின் திருநாமம்; அச் சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்கள் திருநெல்வேலி ம-தி-தா-ஹிந்து கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து வருகிறார்கள்.
******
நூல்
   வியட்டியாகிய அகர உகர மகரம் முறையே பிரம விஷ்ணு ருத்திரர்க்கு இருப்பிடம்.  அம்மூன்றின் சமட்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கு இருப்பிடம்.
    இரணிய கருப்ப னவ்வி விலக்குமி கணவ னுவ்வி
    லுரமிகு சூல மேந்து முருத்திரன் மவ்வி லாவர்
    பரசிவ பிரான்சம் வர்த்த காக்கினி பயில்பே ராகப்
    பிரணவ சமட்டி யென்னும் பீடமீ திருப்ப னன்றே.
    (அ-ரை) இரணிய கருப்பன் - பிரமன்; இரணிய கருப்பனும் இலக்குமி கணவனும் உருத்திரனும் என உம்மை விரித்து ஆவரென்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க.  ஆவர் - இருப்பர்; தோன்றுவரெனினுமாம்.  பயில் பேர் ஆக - தனக்கு வழங்கப்படும் பெயராகக் கொண்டு; பிரணவ சமட்டி - சமஷ்டிப் பிரணவம்; பீடமீது - ஆசனத்தில்.
    'அகார: -- ப்ரஹ்மா --உகார: -- விஷ்ணு -- மகார: -- ருத்ரா -- ஓங்கார: -- ஸம்வர்தகோக்நி - -' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'பூர்வா மாத்ரா - - ப்ரஹ்மா - - த்விதீயா - - விஷ்ணு: - - த்ருதீயா - - ருத்ரா - - சதுர்த்யா - -  ஸம்வர்தகோக்கி - -' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'அகாரே ஸம்ஸ்திதோ ப்ரஹ்மா உகாரே விஷ்ணுராஸ்தித: மகாரே ஸம்ஸ்திதோ ருத்ராஸ் ததோஸ்யாந்த: பராத்பர:' என்ற பிரஹ்மவித்யோபநிஷத்தும், 'அகாரம் ப்ரஹ்மாணம் - - உகாரம் விஷ்ணும் - - மகாரம் ருத்ரம் - - ஓங்காரம் ஸர்வேச்வரம்' என்ற நாஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.  ஸம்வர்த்தகாக்கினி பதமும் ஸர்வேசுர பதமும் பரியாயங்களாய் வந்திருத்தல்காண்க.  அவ் வீசுரபதம் சிவபிரானுக்கே யுரியது.    (க)
******
    பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.
    அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில்
    மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத
    திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக
    மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம்.
    (அ-ரை) அந்தரம் - அந்தரிக்ஷம்; உமைவாழ்பா கச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் - சிவலோகம்; எவ்வம் - கேடு; அருந்தந் தன்னில் - அருத்த மாத்திரையில்.
    'கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், 'அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா' என்ற வராகோபநிஷத்தும், 'அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:', "ப்ருதிவி - - அகாரே - - அந்தரிக்ஷம் - - உகாரே - - த்யெள: - - மகாரே - - பஞ்ச தைவதம் ஓங்காரம் ' என்ற தியாநபிந்தூப நிஷத்தும், 'ப்ருதிவ்யகார: - - அந்த ரிக்ஷம் ஸ உகார: - - த்யெள: ஸ மகார: - - ஸோமலோக ஒங்கார:' என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், 'அரைமாத்திரையி லடங்கும்மடி' என்ற தேவாரமும், 'மஹோசாநமவாங்மநஸகோசரம்' என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ)
******
    மற்றத் தேவர்கள் வைத்துத் தியானிக்குந் தானங்களுக் கெல்லாம் உயர்ந்தது துவாதசாந்த ஸ்தானம்.  அங்குவைத்துத் தியானிக்கப் படுபவர் சிவபிரானென்பது.
    ஈரிரு முகவ னாபி யிடத்தரி யிதயந் தன்னி
    லோரிரு புருவ மையத் துருத்திரன் றுவாத சாந்தச்
    சீரிய தான மீது சிவபிரா னிவர்க டம்மை
    நேரிய யோகி யென்று நிறுத்துவன் றியானத் தாலே.
    (அ-ரை) ஈர் - இரு முகவன் - பிரமன்; நாபி - கொப்பூழ்; ஓர் - சிறந்த; மையத்து - நடுவில்; என்றும் - எப்போதும்; நிறுத்துவன் - வைத்து ஏத்துவான்.
    'த்வாத சாந்தபதம் ஸ்தாநமிதி' என்ற தக்ஷ¢ணாமூர்த்தி யுபநிஷத்தும், 'சீர்ஷோபரி த்வாதசாங்குல ஸ மீ க்ஷ¢துரம்ருதத்வம் பவதி' என்ற அத்வய தாரகோபநிஷத்தும், ' ப்ரஹ்மரந்த்ரே மஹாஸ்தாநே வர்ததே ஸததம் சிவா| சித்சக்தி:' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் நாபெள - - விஷ்ணும் ஹ்ருதயே - - ருத்ரம் ப்ரூமத்யே - - சர்வேச்வரம் த்வாத சாந்தே' என்ற நரஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
******
    இன்னொரு வகைத் தியான முறையில் உச்சஸ்தானமா யிருப்பது நெற்றி.  அதில் வைத்துத் தியானிக்கப் படுவருஞ் சிவபிரானென்பது.
    அயனெனு மவனை நெஞ்சி லரிதனைக் கண்டந் தன்னி
    லுயவினை யுயிர்கட் கோட்டு முருத்திர தேவை நாவிற்
    செயமெலா மன்பர்க் காக்குஞ் சிவபிரான் றன்னை நெற்றி
    நயமிகு மிடத்தி னாட்டி நாளுநற் றியானஞ் செய்யே.
    (அ-ரை) உயவினை - துன்பத்தை; நயம் - நன்மை; நாளும் - தினந்தோறும்.
    'ப்ரஹ்மணோ ஹ்ருதய ஸ்தாநம் கண்டே விஷ்ணு: ஸ மாச்ரித: தாலு மத்யே ஸ்திதோ ருத்ரோ லலாடஸ்தோ மஹேச்வர:' என்ற பிரமவித்யோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (ச)
******
    ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு வண்ணராயிருக்கச் சிவபிரான் மாத்திரம் சர்வ வர்ணங்களையுந் தம்பாற் கொண்டவரென்பது.
    மஞ்சளி னிறவ னாகி மாமறைக் கிழவன்  வாழ்வா
    னஞ்சன வண்ண னாவா னரவமீ துறங்குந் தேவன்
    விஞ்சிய வெள்ளைத் தேவாய் விளங்குவ னரனால் வேதச்
    செஞ்சொலு முரையு மான சிவபிரான் சருவ மன்னன்.
    (அ-ரை) நிறவன் - நிறத்தையுடையவன்; மாமறைக்கிழவன் - பிரமன் அஞ்சனம் - மை; அரவமீது உறங்கும் தேவன் - விஷ்ணு; விஞ்சிய - மிகுந்த; அரன் - உருத்திரன்; உரை - பொருள்.
    'பீதா - - ப்ரஹ்மதைத்யா - - க்ருஷணா விஷ்ணு தைவத்யா - - சுக்க்லா ருத்ரா தைவத்யா - - ஸர்வ வர்ணா புருஷ தைவத்யா' என்ற அதர்வசிகோப நிஷத்தும், 'மற்றுமற்றும் பல்பல வண்ணத்தராய் ' என்ற தேவாரமும், 'ருத்ரோர்த்த அக்ஷர: ஸ உமா' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வ நாதமய: சிவ: ' என்ற தோஜோ பிந்தூப நிஷத்தும், 'ஸர்வாக்ஷ¡மய:' என்ற நாரதபரிவ் ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். புருஷ பதம் சிவபிரானுக்கே யுரிய பெயர்.                    (ரு)
******
    தம்பாற் சர்வ வர்ணங்களையுங் கொண்டதுபோல் ஒருவர்ணத்தையுங் கொள்ளாமல் ஸபடிகம்போல விளங்குபவரும் சிவபிரானே யென்பது.
    மருமலி மலரோன் செய்யன் மங்குலி னிறவன் மாலோ
    னுருமலி கபில வண்ண முருத்திர மூர்த்திக் குண்டால்
    கருமலி யுயிர்கட் கெல்லாங் களைகணாய்த் தானோர் போதுஞ்
    செருமல முறாத செல்வĩ